Friday, December 11, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.


 ஈழத்தமிழ் வழக்கில் புழக்கத்திலிருக்கும் சில பெயர் சொற்களை இன்று பார்க்கலாம்.



1) மனுசன் - மனிதன் / ஆண்/ பேச்சுவழக்கில்  சில சந்தர்ப்பங்களில் கணவரையும் குறிக்கும்.
2) ஆம்பிளை - ஆண்

3) ஆம்பிளைப் பிள்ளை - ஆண் பிள்ளை.

4)இளந்தாரி - இளைஞன்

5)பெடியன் - சிறுவன்.

6)புருசன் - கணவன்
7)இஞ்சருங்கோ - கணவனை மனைவி அழைக்கும் சொல்
8)வெள்ளாளன்  - வேளாளன். வேளாண்மை / விவசாயத்தை பரம்பரை தொழிலாக கொண்டவர்- ஈழத்தின்  ஒரு சாதி பிரிவினர்.

9)கமக்காரன் - விவசாயி.

10)ராசா - அரசன் / பாசத்துடன் ஆண்களை விளிக்கும் சொல்.
11) மோன் - மகனை அழைக்கும் சொல்
12) மனுசி - பெண்/ பேச்சு வழக்கில் சில சந்தர்ப்பங்களின் மனைவியையும் குறிக்கும்.
13) பொம்பிளை - பெண்

14) பொம்பிளப் பிள்ளை - பெண் பிள்ளை

15) பெட்டை -  சிறுமி.

16)பெண்சாதி -  மனைவி.

17)இஞ்சரும் - கணவன் மனைவியை அழைக்கும் சொல் .

18) ராசாத்தி -  அரசி/ பாசத்துடன் பெண்களை விளிக்கும் சொல்
19)மோனை - மகளை அழைக்கும் சொல்

*******************************************
உதாரண வாக்கியங்கள் : 

1) அ)  மனுசன் -  உந்த மனுசனை  நான் வேற எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ( யாரோ ஒரு மனிதரைப்  
            பற்றி பேசும் போது)
    ஆ) என்ர மனுசன் எல்லாரையும் போல இல்லை ..தான் உண்டு தன்ர பாடு உண்டு எண்டு இருப்பார்.
2 )  ஆம்பிளை -  வீட்டில ஆம்பிளை இல்லாத நேரமா வந்து  வீரம் காட்டாத..என்ன ?
3)  தங்கராசாவுக்கு  ஒரு  ஆம்பிளைப் பிள்ளை இருக்கிறானெல்லே?
4)  வர வர இந்த இளந்தாரிப் பெடியன்கள் அந்த சந்தில நிண்டு கொண்டு அடிக்கிற கும்மாளத்துக்கு ஒரு அளவு கணக்கில்லாமல் போச்சுது
5)  இராசரத்தினத்தாரிண்ட  பெடியன் எட்டாம் வகுப்பு பெயிலாமே? உண்மையே?
6) குமுதினிண்ட புருசன்  வாற மாசம்  வெளிநாட்டில இருந்து வாறாராமே?
7) இஞ்சருங்கோ ..  இஞ்ச  ஒருக்கா வாங்கோ...உங்கட மோள வந்து என்னண்டு  கேளுங்கோ...
8) வெள்ளாளன் -  வெள்ளாளர் (விவசாயிகள்) கதிர் அறுப்புக்கு
                                   ஆயத்தமாயிட்டினம் போல இருக்கு.

                                       அந்த பெடி வெள்ளாள சாதி.. உங்கட ஆள் தான்..(சாதிப்         

                                       பெயராக)

9)  கமக்காரன் -  கமக்காரன் இல்லையெண்டால் இந்த கந்தோர்காரர் எல்லாம் என்னத்தை திண்டு கழுவப்
     போகினமாம்?
10) ராசா - 

       அ) பண்டாரவன்னிய ராசா ஆண்ட  நாடடா இது.. ஆருக்கும் அடி பணிய மாட்டம் . (அரசன்)
        ஆ ) அப்பு ராசா என்ர செல்லமெல்லே..நான் சொல்லுறதைக் கேளப்பன். (பாசமுடன் ஒரு ஆணை
               விளிக்கும் போது)

11)  மோன்  - 
         அ) உன்ர மோன் பண்ணின வேலையைப் பார்த்தியாடி பாக்கியம்?
         ஆ) என்ர மோனே..வந்திட்டியா  ராஸ்ஸா?
12)   மனுஷி
           அ)   அந்த மனுசி  மட்டும் இல்லாட்டில் ஆமிக்காரனட்ட  இருந்து  இந்த பெடியளை ஆரும்
                  காப்பத்தியிருக்க முடியாது.
          ஆ)   என்ர மனுசி ஒரு காரியத்தை நினைச்சாளெண்டால் அதை செய்யாமல் விட மாட்டாள்.
13)   பொம்பிள -  இவன் சின்ராசாவிண்ட மகளை  பொம்பிள பார்க்க இண்டைக்கு மாப்பிள்ளை வீட்டாக்கள்
                               வருகினமாம்.  (பெண்)
14)   பொம்பிள்ளைப் பிள்ளை - சின்ராசாவிண்ட பொம்பிள்ளை பிள்ளை  பேய் வடிவு,..அயலுக்குள்ள எல்லா 
                                                          பெடியளும் வளையம் கட்டிக் கொண்டெல்லே திரியினம்?
15)   பெட்டை  -   இந்த பெட்டை என்ன இங்க வந்து மசிஞ்சு கொண்டு நிக்குது?
16)    பெண்சாதி -  பெண்சாதியும் புருசனுமா சேர்ந்து  புளுகத் துடங்கிச்சினமெண்டால் அவ்வளவு தான்..காது புளிச்சுப் போயிடும்.
17)  இஞ்சரும் -  இஞ்சரும்... ஒரு தேத்தண்ணி ஒண்டு போட்டுத் தாரும் பாப்பம்.
18)  ராசாத்தி
       அ)  குவேனி ராசாத்தி அவசரப்பட்டு விசயனை மட்டும் கலியாணம் செய்யாமலிருந்திருந்தால், அந்த
              விசயனையும் சிநேகிதர்களையும் நர பலி குடுத்திருந்தால் ...யோசிச்சுப் பாருங்களேன்..
        ஆ)  என்ர ராசாத்தி இஞ்ச வா ..இந்த வெத்திலைப் பெட்டியை எடுத்து தாணை.
19)   மோனை -  மோனை...மல்லிகா.... உந்த உலை கொதிக்குது...பார்...சோறு அவிஞ்சிட்டுதா எண்டு..


    

No comments:

Post a Comment