Wednesday, February 19, 2014

விடுதலை தந்த விலையில்லாத சந்தோசம்..!!

எத்தனையோ நாள் அற்புதம் அம்மாளின் படங்களை இணையத்தில் பார்க்கும் தருணங்களை குற்றவுணர்வுடன் தவிர்க முயன்றிருக்கிறேன். அவருடைய வாழ்கையின் இடரான துயரான தருணங்களில் எந்தவிதத்திலும் பங்கெடுக்க முடியாத கையாலாகாத நிலையில் இருக்கும் உணர்வின் விளைவு அது. மூவர் விடுதலை என்ற தலைப்பில் என் அஞ்சல் பெட்டிகளை நிறைத்த அத்தனை பெட்டிஷன்களையும் சலிக்காது நிரப்பி நிரப்பி ஒரு குற்ற உணர்விலிருந்து தப்பிக்க முனைந்த அந்த மனதைப் பிசைந்த கணங்கள் இனி வராது. மூவர் பற்றிய செய்திகளின் தலைப்புகளை படிக்கும் முன்பே மூளையையும், மனதையும் கௌவிப் பிடிக்கும் ஒரு திகிலான உணர்வை வெறுத்த அந்த தருணங்கள் இனி இல்லை. ஆனால் இதற்கெல்லாம் விலையாக தன்னை ஆகுதியாக்கிய ஒரு உன்னதமான ஆத்மா இல்லையே என்ற  ஏக்கம் என்றைக்கும் எல்லாத் தமிழர்களிடமும் மிஞ்சி இருப்பது போலவே என்னிடமும் இருக்கும்.  


அம்மா அற்புதம்மாள் என்ற தாயின்  முகத்தில் பொங்கும் உணர்ச்சிக் குவியலை  இன்று அவ்வளவு கண்ணீருக்குமிடையில் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஆசை தீர பார்த்துக் கொண்டே இருக்கிறேன். 

தூக்குத் தண்டணை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டணை என்ற அறிவிப்பைக் கேள்விப்பட்ட அந்த நிமிடம் கிடைத்த நிம்மதிப் பெருமூச்சின் விலை மதிப்பிட முடியாது, அரசியல் இலாபம் கருதியோ எந்த நோக்கமோ எதுவோ...அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை... மூவரையும் உடனடியாக விடுதலை செய்வது என்ற முதலமைச்சரின் அறிவிப்பு தான் 2009 மே 17க்குப் பின் துயர இருளில் மூழ்கிக் கிடந்த தமிழ் இனத்துக்கு  கிடைத்த நல்ல செய்தி . இரட்டிப்பு நிம்மதியுடன் இன்றைக்கு மூன்று குடும்பங்கள் தூக்கம் வராமல் சந்தோசத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருப்பார்களா அல்லது பல வருடங்களின் பின் கண்ணீர் மறந்து தூங்குவார்களா என்ற சந்தோசமான ஊகிப்பிலேயே நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது.

ஒரு குரூரமான உணர்வாக இருப்பினும் இந்த விடுதலை எத்தனை பேரின் முகத்தில் எறியப்பட்ட சேறாக இருக்கும் என்று யோசித்து மனதுக்குள் புன்னகைக்க கிடைத்த சந்தோசமான சந்தர்ப்பத்தை எதுக்காகவும் இழக்க நான் விரும்பவில்லை. நீதி தேவதை கண்ணைக் கட்டிக் கொண்டிருப்பதை தான் இத்தனை நாள் பார்த்திருக்கிறேன், ஆனால் இன்றைக்கு தான் நீதி தேவதையின் கண் திறக்கப்பட்டிருக்கிறது சதாசிவம் ஐயா வழியாக.

இந்த அழகான தருணத்தின் உணர்வை பைத்தியக்காரி போல் பகிர்வதை விட   $600.000 .00 இலாபத்துக்கான முதலீட்டின் கணக்கு வழக்கு பார்க்க வேண்டிய நேரம் அப்படியொன்றும் பெரிதாக தெரியவில்லை. .... !!  10 வருடங்களாக காத்திருந்து கிடைத்திருக்கும் ஒரே நேரத்தில் மூன்று ரியல் எஸ்டேட் முதலீட்டு காண்ட்ராக்ட். அதற்காக ஒரு மாதகாலமாவது இணையத்தை பிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்றால் என்னால் இந்த சந்தோசத்தின் பின்னால் முடியவில்லை. உன்னை திருத்தவே முடியாது என்பது போல் என் கணவர் என் பின்னாலிருந்து சிரித்துக் கொண்டே தலையை உலுப்புகிறார்...ஆனால் அவரால் கூட இன்று முழுவதும் நம்ப முடியாத உணர்ச்சிக் குவியலில் தான் இருக்கிறார். எனக்கு என் உணர்வை வெளிப்படுத்த எழுத தெரிகிறது. ஆனால்...பாவம் அவருக்கு அந்த கொடுப்பினையைக் கடவுள் கொடுக்கவில்லை...!! :)
இன்று நான் மிக மிக சந்தோசமாக இருக்கிறேன்.

Tuesday, February 11, 2014

ஒப்புக்கு சொல்லப் படும் உப்பு சப்பில்லாத தத்துவங்கள்


 ஒப்புக்கு சொல்லப் படும் உப்பு சப்பில்லாத தத்துவங்கள்


இது வரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடப்பது என்பதை யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்!

இப்படி ஒரு தத்துவத்தை ஒரு நண்பரின் பதிவின் பின்னூட்டத்தில் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மிக சுலபமாக தத்துவங்கள் எழுதப்படுகின்றன. ஆனால் அவற்றை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு வாழத் தலைப்படுபவர்களுக்கு தான் தெரியும் அவை வெறும் ஜிகினா பூசப்பட்ட வார்த்தைகள் என்று.

நடந்தவற்றை யோசிப்பதை விட்டுவிட்டு நடக்கப் போவதை சிந்திக்க சொன்னால் எதையென்று சிந்திக்க முடியும்?? குடும்பமே நிர்மூலமாக்கப்பட்ட சிறுவனிடம் போய் இதை சொல்லிப் பாருங்கள்! இராணுவத்தினரால் வன்கொடுமை செய்யப்பட்டு , குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும் ஒரு பெண்ணிடம் போய் சொல்லிப் பாருங்கள்! உயிரோடு கருகிய சொந்தங்களின் பிணக்குவியலில் உட்கார்ந்திருக்கும் ஒரு அனாதை அகதியிடம் போய் சொல்லிப் பாருங்கள்..!!

ஒவ்வொருவருவம் அடுத்து வரும் நாட்களை கடத்தப் போகிறார்கள் தான். அதற்காக சுவாசிக்கப் போகிறார்கள் தான். சுவாசிப்புக்காக சாப்பிடப் போகிறார்கள் தான். சாப்பாட்டுக்காக உழைக்கவோ அல்லது அகதிப் பிச்சையோ வாங்கப் போகிறார்கள் தான். ஆனால் அந்த நாட்கடத்தல்களில் என்ன விடிவு வரப் போகிறதென்றோ அல்லது நான் என்ன சாதிக்கப் போகிறேன் என்றோ எதிர்பார்ப்போ, திட்டமிடலோ எதுவும் இருக்கப் போவதில்லை. சூனியமாக்கப்பட்ட ஒரு வரலாற்றின் அடையாளங்களாக இருக்கும் வரை இருந்துவிட்டுப் போகப் போகிறோம். எங்களிடம் வந்து தத்துவப் பதாகைகளை காட்டாதீர்கள்!!