Friday, October 11, 2013

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்....

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்.... 


படித்தது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி. கிறிஸ்துவப் பாடசாலை. ஆனால் எல்லா சமயத்தவருக்கும் பிராத்தனை இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பக்திப் பாடல்களும், சிவபுராணமுமாய் பொன்னையா மிஸ்ஸின் இனிமையான 
குரலில் பாடக் கேட்பதே ஒரு பரவசமான விசயம் தான். அதுவும் அவர் எம்.எஸ்.எஸ் அம்மாவின் காற்றினிலே வரும் கீதம் பாட்டைப் பாடும் கிடைக்கும் சந்தோசம் இருக்கே....இத்தனை வருசம் ஆகியும் அந்தக் குரல் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை.

வருடா வருடம் நத்தார் பெருநாள் எந்தளவுக்கு சிறப்பாக கொண்டாடப்படுமோ அதே அளவு சிறப்பாக சரஸ்வதி பூசையும் கொண்டாடுவோம். நல்லூர் வீராளி அம்மன் கோவிலுக்கு கிட்ட இருக்கும் ஒரு மண்டபத்தில் தான் எங்கள் பள்ளிக்கூடத்து சரஸ்வதி பூசை கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
சரஸ்வதி பூசை கலை விழாவில் ஒவ்வொரு வகுப்பினரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி கொடுப்பார்கள். நாடகம், பாட்டு, வில்லுப்பாட்டு, நடனம், கோலாட்டம் என்று ஒரு பல்சுவை நிறைந்த கலைவிழாவாக அதிலும் விசேசமாக என்னுடைய வகுப்பு தோழி நளாயினியின் அக்காக்கள் இருவரின் பாம்பு, மயில் நடனம், தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஒரு தாம்பாளத்தின் விளிம்பில் நின்று ஆடும் நடனமுமாய் என்னவொரு சந்தோசமான கலைவிழாவாக அவை இருந்திருக்கின்றன தெரியுமா???

எல்லா மாணவிகளுக்கும் சரஸ்வதி பூசை எப்ப வரும் என்ற ஏக்கம் இருக்கும் ..காரணம் அன்றைக்கு நாம் எல்லாம் பள்ளிச்சீருடைக்கு டாடா பை பை...தான்... பட்டுப் பாவாடை சட்டை என்ன, பாவாடை தாவணி என்ன... அல்லது வூலி நலைக்ஸ் , காஷ்மீர் ஸில்க், ஷிபான் கிரேப் சேலை என்ன என்று அழகழகான வண்ணாத்துப் பூச்சிகளாக , பூச்சரமும், காப்பு, சங்கிலியுமாய் அலங்காரங்களுடன் தோழிகளுடன் சந்தோசமாக கழிக்கும் நாள்.

கலை நிகழ்ச்சி முடிய கிடைக்கும் அவல், சுண்டல், பொங்கல், வடையை விட சேலை கட்டக் கிடைத்த சந்தோசமும், வெட்கமும், பூரிப்பும் தான் அதிகமான விசேசமாக இருக்கும்..!

பள்ளியின் நாலு சுவருக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவிகள் அன்றைக்கு ஒரு நாள் சுதந்திரச் சிறகு முளைத்திருக்கும் பட்டாம் பூச்சிகளாக ஆசிரியர்களின் துணையுடன் வீதியில் நடந்து மண்டபத்துக்கு போவோம். போகும் போது பக்கட்தில் இருக்கும் சென்.ஜோன்ஸ், சென்.பற்றிக்ஸ், பாடசாலை இளவட்ட மாணவர்கள் அவரவர் சைட் அடிக்கும் மாணவிகளைப் பார்க்க சைக்கிளில் வந்து சுழட்டிக் கொண்டு போவதும், கடைக்கண்ணால் பார்த்து தோழிகளுடன் கதாநாயகிகள் கிலுகிலுத்துக் கொண்டு போவதும்.........அதை வேடிக்கை பார்க்கும் சைட் அடிக்க ஆளில்லாத இரண்டாம் கதாநாயகிகளான நாங்களும், புரிந்தும் புரியாதவர்கள் போல் “கேர்ள்ஸ்...அங்க என்ன சிரிப்பு...ஒழுங்கா லைன்ல வாங்கோ பாப்பம்” என்று அதட்டும் ஆசிரியர்களுமாய்.........அடடா....!

எல்லாம் வருசா வருசமும் கொண்டாடும் சரஸ்வதி பூசை கலை விழாவில் எத்தனை வித்தியாசமான புது புது கலை நிகழ்சிகளை நடத்தினாலும் என்னுடைய வகுப்பு தோழி நளாயினியின் அக்காக்கள் இருவரின் பாம்பு, மயில் நடனம், தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஒரு தாம்பாளத்தின் விளிம்பில் நின்று ஆடும் நடனமும், கொலு படியின் முன்னால் மாணவிகள் கோரஸாகப் பாடும் ”வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்” என்ற இந்தப் பாட்டும் எல்லா வருசமும் மாறாமல் இருக்கும். இப்போது இந்தப் பாட்டை கேட்கும் நேரங்களில் திரும்பவும் பழைய பள்ளிக்கூடத்தில் போய் அதே தோழிகளுடன்...அதே ஆசிரியர்களுடன், அதே வகுப்பு மேசையில் இருக்க இன்னொரு சந்தர்ப்பத்தை இந்த வாழ்கை தராதா என்ற ஏக்கம் மனதை வாள் மாதிரி அறுக்கிறது.

Tuesday, October 8, 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.

அந்தப் படம் வந்த மூட்டம் முதல் ஸீன் பார்த்த போது ரொம்பவும் ஸ்லோவா இருக்கிற மாதிரி தெரிய அந்த விசிடி தட்டை தூக்கி எங்கோ மூலையில் எறிந்துவிட்டு போய்விட்டேன்.

நேற்று என்றைக்கும் இல்லாத திருநாளாக என் பிராணநாதர் உட்பட வீட்டில் அனைவரும் உட்கார்ந்து அதே படத்தை வாய் விட்டு சிரித்து சிரித்துக் கொண்டெ பார்த்து முடித்தோம் .

கனநாளைக்கு பிறகு அன்றைக்கு தான் வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து  படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது மனதுக்கு மிகவும் சந்தோசமாக  இருந்தது. படமும் அந்தமாதிரி ஒரு முஸ்பாத்தியான படம். ஒட்டு மொத்தமாக வீட்டிலிருந்த அனைவருமே சொல்லி வைத்தாற் போல் வாய் விட்டு சிரித்து பார்க்க தக்கதாக ஒரு படத்தை தந்ததற்கு அந்த திரைப்படத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.

அந்தப் படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.!! :)

கதாநாயகன் தான் விஜய சேதுபதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அசப்பில் எனது ஃபேஸ்புக் தம்பிமார்களில் ஒருவரான Yogoo Arunakiri யைப் போலவே எனக்கு தெரிந்தார்.  “என்னாச்சி...ஓ கிரிக்கெட் விளையாடினமா...நீ தானே அடிச்சே....?” என்று ஒவ்வொரு தடவையும் அவர் ஆரம்பிக்கும் போதெல்லாம் சம்மந்தமேயில்லாமல் தம்பி யோகா தான் நினைவில் வந்து கொண்டிருந்தார்.

அதுவும் திருமண reception ல் மணப்பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாகி “பா........”” என்று அலறியபடி திரும்பும் ஒவ்வொரு கட்டமும் நாங்கள் எல்லோரும் அவருடன் சேர்ந்து அதே மாதிரி “பா.....” என்று கலாட்டா செய்யுமளவுக்கு சூப்பராக இருந்தது. இன்று காலை குளித்து விட்டு தலை சீவிக் கொண்டிருக்கும் போது என் பிராணநாதர் என்னைப் பார்த்து “பா...” என்றாரே பார்க்கலாம். எனக்கு தெரியும் இனி கொஞ்ச நாளைக்கு நான் என்ன சட்டை போட்டாலும், எப்பிடி தலை இழுத்தாலும் இந்த “பா ....”சத்தம் கேட்க்கப் போவது நிச்சயமெண்டு....

தமிழில் நல்ல படம், இரசிக்கத் தக்க படம், வித்தியாசமான படம், தரமான படம், விரசமில்லாத படம் இனி வரவே வராது என்று ஒப்பாரி வைக்கும் திரைவிமர்சகர்கள் இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்லியிருந்தார்கள் என்று தெரியவில்லை...ஆனால் கன நாளைக்கு பிறகு ஆரம்பம் முதல் கடைசிக்கட்டம் வரை  நகராமல் இருந்து இரசிக்கத்தக்கதாக , தரமான, விரசமேயில்லாத, வித்தியாசமான , மனம் இலேசாகிப் போகுமளவுக்கு வாய் விட்டுச் சிரிக்க வைத்த நல்ல முஸ்பாத்தியான தமிழ் படம் பார்த்ததில் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.

சிவாஜி செத்துட்டாரா???

என்னாச்சி.........??? 

பிற்குறிப்பு:

இவ்ளோ நாள் கழிச்சு ஒரு படம் பாத்திட்டு எழுதியிருக்கிறேன்... எவராவது வந்து இங்கன விஜய சேதுபதி மாதிரி டயலாக்  எழுதினீங்கன்னு வையுங்களேன்.....சூன்யம் வைச்சுடுவேன் ஆம்மா,...ஜாக்கிரதை !!!