Sunday, December 13, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.

ஆக்கினை

அகரமுதலி - ஆக்கினை


ஆக்கினை என்ற சொல்லுக்கு அகராதியில் பலவிதமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவையாவன:
கட்டளை

உத்தரவு

தண்டனை

எனினும் ஈழத்துப் பேச்சு வழக்கில் இந்த ஆக்கினை என்ற வார்த்தை அன்றாட உபயோகத்தில் சிரமங் கொடுத்தல், தொந்தரவு செய்தல் போன்ற அர்த்தங்களிலேயே பெரும் பாலும் இடம்பெறுகிறது.

எங்கள் தாலாட்டுப் பாடல் ஒன்றில் இப்படி வருகிறது.

”ஆராரோ ஆரீவரோ
ஆரடித்து நீர் அழுதீர்?
அடித்தவரை சொல்லியழும்.
ஆக்கினைகள் செய்து வைப்போம்.”

யோகாசனத்தில் “ஆக்கினை தவம்” என்றொரு முறை இருக்கிறதாம்.

ஆக ஆக்கினை என்ற பதம் மிகப் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எனது ஊகம்.

உதாரணம்:

1) உதென்ன பெரிய ஆக்கினையா கிடக்குது?
(இது என்ன பெரிய தொந்தரவாக இருக்கிறது)

2) வரதன்ர ஆக்கினை தாங்காமல் தான் அவன்ர பெண்சாதி கிணத்துக்குள்ள குதிச்சவளாம்.
(வரதனின் கொடுமை தாங்க முடியாமல் தான் அவனுடைய மனைவி கிணற்றுக்குள் குதித்தாளாம்)

3) பள்ளிக்கூடம் போக மாட்டன் எண்டு இவன் ஒரே ஆக்கைனைப்படுத்துறான்.
(பாடசாலைக்குப் போக முடியாது என்று இவன் அடம்பிடித்து தொந்தரவு செய்கிறான்)

4) இப்பிடியே நீ அவளை ஆக்கினைப்படுட்திக் கொண்டிருந்தியெண்டால் ...ஒரு நாளில்லை ஒரு நாள் அவள் உன்னை கொன்றே போட்டுடுவாள்.
( இந்த மாதிரி அவளை நீ துன்புறுத்திக் கொண்டிருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவள் உன்னைக் கொன்றுவிடுவாள்)

5) புதுச்சட்டை வாங்கித் தா எண்டு வீட்டில பிள்ளையளின்ர ஆக்கினை / ஆக்கினையை தாங்க முடியவில்லை.
(புது உடை வாங்கித் தர சொல்லி வீட்டில் பிள்ளைகளின் தொந்தரவு / தொந்தரவை தாங்க முடியவில்லை )

பிற்குறிப்புகள்:

Sadayan Sabu ஆக்ஙை என்பது தான் ஆக்கினை ஆனது ஈழத்தில். ஙை என எழுதுவதின் சிரமமானதால் குறுகி ஆனை ஆனது. ஆக்ஙை , கட்டளை என பொருளில் வரும்

***********************************

இளங்குமரன் தா புனித வேதாகம வசனங்களில் பொல்லாத ஆக்கினைகளிலிருந்து காப்பாற்றும்.. என்று ஆக்கினை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.

  ***********************************

ஈஸ்வர் சிவகிருஷ்ணன் ஆக்கினை- வடசொல். கட்டளை, அரசகட்டளை, உத்தரவு(உத்தரவும் வடசொல்) தண்டனை என்ற பொருளிலும் வரும் சிரசாக்கினை- தலையைவெட்டுதல்..... இச்சொல் இங்கு வழக்கில் அரிது இல்லையென்றே சொல்லலாம்....

 

No comments:

Post a Comment