Monday, August 5, 2013

ஊடகங்களுக்கான இறுதி அஞ்சலி !

 
 ஊடகங்களுக்கான இறுதி அஞ்சலி ! (ஜூலை 31 2013ல் எழுதியது)
 
செய்திகளை முந்தி தரும் போட்டா போட்டியில் ஒவ்வொரு ஊடகமும் அதுவும் உலகத்தரம் வாய்ந்த பி.பி.சி , கலைக்களஞ்சியம் என்று மார்தட்டிக் கொள்ளும் விக்கிபீடியா , விகடன்.காம் என்று பலதரப்பட்ட இணைய ஊடகங்கள் ,பத்திரிகைகள், தொலைக்காட்சி நி்றுவனங்கள் அத்தனையும் இன்று ஒரு பெண்ணை உயிரோடு இருக்கும் போதே சாகடித்து, மீண்டும் அந்தப் பெண் உயிரோடு இருக்கிறாராம் என்றும் இரண்டு செய்திகளை[ப் பரப்பி விட்டு அந்தப் பெண்ணிடமே போய் “ஏங்க நீங்கள் இறாந்துவிட்டதாய் செய்திகள் வந்ததே...அது பற்றிய உங்கள் மனநிலை என்ன? “ என்று ஒருவித குற்றவுணர்வு கூட இல்லாமல் எத்தனை இலகுவாக மைக்கை நீட்டிக் கேள்வி கேட்கிறார்கள்??? !!!!!!!

முன்பெல்லாம் பத்திரிகைக்கென்று ஒரு நேர்மையும் , நாகரீகமும் இருந்தது. உலகத்தில் நடக்கும் தவறுகளையும், பித்தலாட்டங்களையும் அம்பலமாக்கும் பத்திரிகையில் அவை பற்றிய செய்தியில் ஒரு துளிதன்னும் பொய்யோ பிழையான தகவலோ இருக்கக் கூடாது என்ற கவனிப்பும் அக்கறையும் இருந்தது. அத்தனையையும் மீறி ஒரு தவறான செய்தி பிரசுரிக்கப்பட்டால் அதன் அடுத்த நாளைய பிரதியில் மனம் வருந்துகிறோம் என்று ஒரு பெட்டிச் செய்தியில் அப் பத்திரிகை நிறுவனம் மன்னிப்புக் கோரியிருக்கும் சம்மந்தப்பட்டவர்களிடமும் , வாசகர்களிடமும். அத்தகைய நாகரீகமும், நேர்மையும் இப்போது எங்கே போய்விட்டது??

இதுவரை நடிகை கனகாவின் மரணச் செய்தியை வெளியிட்ட அத்தனை இணையத்தளங்களும், அவர் உயிரோடிருக்கிறார் என்பதையும் வெளியிட்டதே அன்றி தங்களுடைய தவறுக்காக மனம் வருந்தியதாகவே தெரியவில்லை. ஒரு சிறு வருத்தமோ மன்னிப்போ வாசகர்களிடமோ அல்லது நடிகை கனகாவிடமோ தெரிவிக்க வேண்டிய நாகரீகம் , கடமை தங்களுக்கு இருக்கிறது என்ற சுரணையே இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

நடிகையின் மரணச் செய்தியிலும், , அவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தியிலும் தங்கள் ஊடகங்களை ஊதிப் பெருப்பித்த இலக்கு ம்ட்டுமே அவர்களுக்கு தேவைப்பட்டதாக இருந்திருக்கிறது.

இதோ விகடன்.காமில் இது போல் எமது ஊடக மூதாதையர்களே எத்தனை பேரை உயிரோடு இருக்கும் போது சாகடித்திருக்கிறார்கள் பாருங்கள் என்று பட்டியல் போட்டிருக்கிறதே தவிர அதுவும் தனது தவறையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை...!!
(https://www.facebook.com/photo.php?fbid=586939831364811&set=a.190403194351812.47794.189960617729403&type=1&theater )

இன்று உயிரோடிருந்த கனகாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் மூலம் இணையத்தளம் முதற்கொண்டு அத்தனை ஊடகங்களும் அவர்கள் மீதான் நம்பகத்தன்மைக்கு மக்கள் மத்தியில் இறுதி அஞ்சலி பெற்றிருக்கிறார்கள். அவ்வளவே...!!

இனிமேலும் இந்த ஊடகங்களில் வரும் செய்தியை நம்ப முடியுமா என்ன??
 
 

விகடன் ஈ-மகஸினில் வந்திருக்கும் செய்தி:

இறந்தார்... ஆனால் இறக்கவில்லை!

நேற்றைக்கு நடிகை கனகாவை இறந்ததாக செய்தி வாசித்தார்கள் இல்லையா? இப்படி உலகம் முழுக்க யாருக்கெல்லாம் செய்தி வாசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போமா? http://bit.ly/14hiEsJ

* குத்தூசி ஒரு சிலை சிதிலமடைந்து கடந்ததைப்பற்றி எழுதுகிறபொழுது காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் என்று எழுதி விட்டார். அவருக்கு இதழ் வெளியான காலையில் ஒரு அழைப்பு, "நான்தான் காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் பேசுகிறேன்" என்று.

* அமெரிக்காவின் எழுத்துலக பிதாமகர் என புகழப்படும் மார்க் ட்வைன் உயிரோடு இருக்கும் பொழுதே அவர் இறந்து விட்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, "கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட இறுதி அஞ்சலி" என நையாண்டி செய்தார் அவர்.

* உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரசல் ஜப்பானிய பத்திரிகைக்கு பேட்டி தரமாட்டேன் என்று மறுக்க, மனிதருக்கு இரங்கல் அஞ்சலி எழுதிவிட்டார்கள்.

* பாடகி மடோனா இறந்துவிட்டதாக பிபிசி யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோ வெளியானது. பின்னர் பார்த்தால் அது அவர்களின் சேகரிப்பில் இருந்தது என்பது தெரிந்தது. ஒருவர் சாவதற்கு முன்னமே முன்யோசனையாக வீடியோ தயார் பண்ணி வைத்து இருக்கிறார்கள். இதைப்பற்றி எதுவுமே வாயை திறக்கவில்லை பிபிசி.

* ரூட்யார்ட் கிப்ளிங் உயிரோடு இருக்கும்பொழுதே இறந்து விட்டதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட... அவர், "நான் இறந்து விட்டேன்; உங்களின் சந்தாதாரர் பட்டியலில் இருந்து என்னை நீக்கி விடுங்கள்!" என்று கடிதம் எழுதினார்.

* பிடல் கேஸ்ட்ரோ, போப் ஜான் பால் இருவரும் உயிரோடு இருக்கும்பொழுதே இறந்ததாக சிஎன்என் அறிவித்தது. அதிலும் பிடல் கேஸ்ட்ரோவின் மரணத்தை ரீகனின் மரணத்தோடு சேர்த்து வெளியிட்டது. உண்மையில் இருவரும் இறக்கவில்லை. கேஸ்ட்ரோவை தடகள வீரர், சினிமா நட்சத்திரம் என்று வேறு எழுதிவிட்டார்கள்.

* ஜெயப்ரகாஷ் நாராயண் இறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்து, பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. உளவுத்துறை தலைவர் மருத்துவமனையில் ஜெபியைப் போல இருந்த இன்னொருவரை பார்த்துவிட்டு வந்து கொடுத்த தகவலால் வந்த வினை!

* கொலரிட்ஜ் எனும் கவிஞர் இறந்துவிட்டதாக வந்த செய்தியை ஒருவர் வாசித்துக்கொண்டு இருந்தார். "அவர் ஒரு மாபெரும் கவிஞர்; சிறப்பாக அவரின் ரீமொர்ஸ் நாடகம் வெற்றி பெற்ற பின் அவர் தூக்கில் தொங்கியது விந்தையானது!" என்று அவர் வாசிக்க, கொலரிட்ஜ், "அதை விட விந்தையானது, அவர் உங்கள் முன் நிற்பது!" என்றார். இவரின் டி ஷர்ட்டை திருடிப்போன திருடன் அதை அணிந்து கொண்டு தூக்கில் தொங்கி விட்டான். அந்த சட்டையில் இவரின் பெயர் பொறித்திருந்ததில் வந்த சிக்கல் அது.

ஆல்பிரெட் நோபலின் தம்பி லுடிவிக் வெடிவிபத்தில் இறந்துபோக, 'மரணத்தின் வியாபாரி மரணம்!' என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க, அப்பொழுது மனம் வருந்தி நோபல் பரிசை உருவாக்கினார் ஆல்பிரெட் நோபல்!

- பூ.கொ.சரவணன்

Sunday, August 4, 2013

வலிகள் உணரப்படுமா??





 “First they came for the communists, and I did not speak out—
because I was not a communist;
Then they came for the socialists, and I did not speak out—
because I was not a socialist;
Then they came for the trade unionists, and I did not speak out—
because I was not a trade unionist;
Then they came for the Jews, and I did not speak out—
because I was not a Jew;
Then they came for me—
and there was no one left to speak out for me.”
― Martin Niemöller



எங்கள் வீடுகளிலும் இப்படித் தான் எங்கள் அம்மாக்கள் நினைவிழந்து மூர்ச்சித்து வீழ்ந்தார்கள்..!

எங்கள் பிள்ளைகள் தங்கள் அப்பாக்களை இழந்து, அண்ணன் தம்பிகளை இழந்து வெம்பி வெதும்பிப் போய் திக்கித்துப் போய் நின்றார்கள்.!!

இளம் மனைவிகள் விதவைகளாகி வெள்ளை சேலை கட்ட வைத்த பின் எங்களுக்கு சமாதானக் கொடியின் நிறம் மறந்து போய்விட்டது. !!

எங்கள் நெற்றிப் பொட்டுகள் கழுவப்பட்ட போதுகளில் எங்கள் மனதில் துளிர்விட்ட உணர்வுகளின் வடிகால்கள் எதை நோக்கி வழிநடந்தனவோ ......அதே உணர்வுகளின் சின்ன துளிர்கள் இப்போது உங்கள் மனதிலும் முளைவிட்டிருக்குமே....??

உங்களுக்காவது செத்தவீடுகள் கொண்டாட இடமும், பூதவுடல் பத்திரப்படுத்த பிரேதப் பெட்டியும் கிடைத்திருக்கிறது.. !!

ஆனால் செத்த இடத்திலேயே புதைக்கவோ, எரிக்கவோ முடியாமல் அனாதைகளாக பெற்றோர்களை, பிள்ளைகளை பிணங்களாகப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிய அவலங்கள்.... வீட்டு வளவுகளையே எங்கள் உறவுகளை எரிக்கும் மயானங்களாக்கிய கொடுங்காலங்கள் வாழ்நாள் முழுவதும் சீழ் வடிந்த ரணங்களாக சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமல் எங்கள் மரணங்களை கொண்டாடிய உங்கள் வீடுகளில் அதே அவலங்களை பரிசளித்திருக்கிறார்கள் உங்களவர்கள்....!!

இப்போதாவது புரியுமா எங்கள் இழப்புகளின் வலிகள் உங்களுக்கு..என்று ஒரு வினாடி யோசிக்க வைத்தாலும் , பொது நாகரீக வேடதாரிகளைப் போல் உங்களுக்காக பரிதாபப்படுகிறேன் , துடித்துப் போகிறேன் என்று பொய்சொல்ல முடியவில்லை ....எனினும் மனதின் ஒரு மூலையில் வலிக்கத் தான் செய்கிறது....!!