Monday, December 14, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்.

பிட்டு
எங்களூரின் உணவில் மிக முக்கிய  முதல் மூன்று இடங்களை பிடிக்கும்  உணவு வகைகள் என்றால் சோறு, பிட்டு/புட்டு , இடியப்பம் ஆகிய மூன்றையும் தான் சொல்ல வேண்டும்.
எங்கள் உணவுப்பழக்கம் என்பது காலையிலும் இரவிலும் மெலிதான உணவாயும் மதியம்  கன போசனமாயும் பகுக்கப்பட்டது.அதன் பிரகாரம் சோறு பெரும்பாலும் மத்தியானச் சாப்பாடாகவே அமையும்.
  பிட்டு , இடியப்பம், பாண் போன்றவை காலை அல்லது இரவு உணவாக உட்கொள்ளப்படும். அப்பம் தோசை இட்டலி போன்றவை எப்போதாவது எல்லோரும் ஒன்றாக இருக்கும் ஓய்வு நாட்களில், வாரக் கடைசியில் , அல்லது  விடுமுறை நாட்களில் மட்டும் காலை உணவாக உட்கொண்டிருக்கிறோம். கால மாற்றங்களும் , போர் சூழலும் , புலம் பெயர் வாழ்வும் இந்த சுழல் வட்டங்களையும் , வகைகளையும் மாற்றியிருந்தாலும் பெரும்பாலான மக்கள் இன்றும் இப்படியே உணவுப் பழக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
பிட்டு அல்லது புட்டு என்பது  எத்தகைய பாரம்பரியமான பழமை வாய்ந்த உணவு என்று நான் சொல்ல தேவையில்லை. சிவபிரானே பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி வாங்கிய கதை எல்லாம் படித்திருக்கிறோம்;  ஆகையால் பிட்டு என்ற உணவு வகை மிகப்பழமை வாய்ந்த உணவு என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய பழமை வாய்ந்த உணவை இன்று வரை பெரும்பாலான ஈழத் தமிழ் குடும்பங்களின் அன்றாட உணவாக இடம் பிடித்திருக்கிறது என்பது நமது பாரம்பரியம் எத்தனை சந்ததிகளாய் புறக்கணிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.
அது என்னவோ நம்மவர்களிடம் பிட்டு அல்லது இடியப்பம் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிக மிக குறைவு . எல்லோருக்கும் மிகப் பிரியமான உணவாக அது இன்று வரை இருக்கிறது. பிட்டுக் குழைத்து அவிக்கத் தெரியாத பெண்கள் ஈழத்தில் இருந்தால் அது உலகின் அதிசயங்களில் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். அந்தளவுக்கு பிட்டு எம்மோடு ஒன்றிப் போய்விட்ட உணவு.
பிட்டு பொதுவாக  சிவப்புப் பச்சை அரிசி மாவில் கொதி நீர் விட்டு, அளவான உப்பு கலந்து மாவைக் கிளறி அழகழகான மணிகள் போல் உருட்டி எடுத்து   அதனுடன்  தேங்காய் பூ தூவி  நீராவியில் வேக வைத்து எடுத்து பரிமாறப்படும்.  காலப் போக்கில் வெள்ளை அரிசி மா, சோளன் மா, ஒடியல் மா, குரக்கன் மா , அமெரிக்கன்(மைதா) மா, கோதுமை மா (ஆட்டா மா) , உளுத்தம் மா போன்ற சகல மா வகைகளிலும் (வறுத்தோ அல்லது நீராவியில் வேக பண்ணியோ அரித்தெடுத்த மா), தயாரிக்கக் கூடியதாக முன்னேறியிருக்கிறது.

எங்கள் ஊரில் பிட்டை இரண்டு விதமாக   அவிப்போம்.
குழல் புட்டு  
          நன்றி :(http://tamilbeautytips.com/?p=12979))

நன்றி(https://ta.wikipedia.org)



 நன்றி :(http://www.arusuvai.com)
குழல் பிட்டு 

குழல் பிட்டு  என்பது மூங்கில் குழல்களில் பிட்டு மாவை போட்டு நீராவியில் வேக வைத்து எடுப்பது.
இப்போது அலுமினியம் போன்ற உலோகங்களில் புட்டுக் குழல்கள் தயாரிக்கப்படுகின்றன.

நீத்துப் பெட்டிப் /நீற்றுப் பெட்டி புட்டு


நன்றி(தமிழ் விக்கிபீடியா)


நன்றி: (yarl.com)

பனை ஓலையால் பின்னப்பட்ட கூம்பு வடிவான கலயத்தில் புட்டு மாவும் தேங்காய் பூவும் கலந்து போட்டு நீராவியில் வேக வைத்து எடுப்பது. 
இப்போது  Steamer போன்ற வசதி கிடைப்பதால்  நீத்துப் பெட்டி அருகி வருகிறது. அதுவும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்  நீற்றுப் பெட்டி கிடைப்பது அரிதென்பதால் இந்த ஸ்டீமர் முறையில் அல்லது அலுமினிய புட்டுக் குழல்கள் மூலம் பிட்டு அவிக்கிறார்கள்.
பிட்டு  எல்லாவிதமான கறி வகைகளுடனும் மட்டுமல்ல , முக்கனிகளோடும் , தேங்காய் சம்பல், சீனி, சர்க்கரை , சொதி , முட்டைப் பொரியல், கருவாடு என்று எந்த ஒரு பக்கத்துணையுடனும் உட்கொள்ளக் கூடிய உணவு வகை. ஆயினும் பெரும்பாலும் வாழைப்பழம், சொதி ,சம்பல் போன்றவை அனைவராலும் தேர்வு செய்யப்படுபவை.
குரக்கன் மா பிட்டு, ஒடியல் மா பிட்டு, உளுத்தம் மா பிட்டு, கீரைப் பிட்டு என்று விசேஷமான  பிட்டு வகைகள் இருக்கின்றன. 

குரக்கன் மாவில் சர்க்கரை அல்லது பனங்கட்டி தூள்களை தேங்காய் பூவுடன் கலந்து அவிப்பார்கள்.
அதே போல் உளுத்தம் மா பிட்டு தேங்காய்ப் பால் கலந்து உளுத்தமாவில் தயாரிக்கப்படும் பிட்டு ஆகும் .  இந்த விசேட வகையான  பிட்டை சாமத்தியப் பட்ட பெண் பிள்ளைகளுக்காக தயாரிப்பார்கள். இந்த பிட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கிய கத்தரிக்காய் கறியுடன் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள்.
கீரைப் பிட்டு என்பது முருங்கை இலைக் கீரை கலந்து வேக வைக்கும் பிட்டு.

No comments:

Post a Comment