Wednesday, May 28, 2014

அகதி

தாயகத்தின் மாட்சிமைகள் தரைமட்டமாக்கப்பட்ட
சில கதைகள் சொன்ன பின்
அவனிடம் பிச்சை வாங்க
சில விண்ணப்பங்கள் நிரப்பி
முத்திரை குற்றப்பட்டு வெளியேறினேன்...
உடுத்தியிருந்தும் நிர்வாணமாய் குறுகியது
எங்கோ ஒரு மூலையில் மூளையில்
உணர்வு..


வெளியே....
இன்னொரு பெருநகர் வீதியின்
இரு புறமான பாதையில்
எனக்கென்ற இலக்கு தெரியாத திகில்
அப்பி போயிருந்தது..
போவதற்கு எனக்கு இடம் எதுவுமில்லை...

முகவரிகள் தெரியாத
பரிச்சயங்கள் இல்லாத ....
வாசல் ஒன்றில் கழற்றிவிடப்பட்ட
காதறுந்த செருப்பின் அந்நியமாய்
உணர்வு கசங்கிய போது தான்
அறிவு சொன்னது
அங்கே வீழ்ந்த குண்டுகளில்
ஒன்றாவது என்னைக் கொன்றிருக்கலாமென....

Saturday, May 3, 2014

 அனாதைகள்
 
-நாங்கள்
அகதிகளாக்கும் என்று
நினைத்திருந்தோம்...
இப்போது தான் புரிகிறது
நாங்கள்
அனாதைகளாகியிருக்கிறோமென்று..!
முகவரிகளற்ற,
 அடையாளங்கள் பறிக்கப்பட்ட
முகமிழந்த மனிதர்கள் நாங்கள்.
உரிமையின் தேடல் போரில்
எமக்கான தண்டணையாக
உணர்வுகள்
வன்மையாக பொசுக்கப்பட்டு
இருள் அடர் காடுகளில்
குருடர்களாக விடப்பட்டோம்..

மிச்சமிருந்த நிலங்கள் பறிபோக
சொச்சமாயிருந்த உறவுகளையும்,
உன்னதமான தலைவனையும்
பறிகொடுத்த
வரலாற்றின் எச்சங்கள் நாங்கள்.

தறித்து வீழ்த்தப்படும்  ஒவ்வொரு பொழுதும்
விதைத்த சிறு பருப்பின் முளையாய்
திரும்ப திரும்ப எழுந்து நிற்க பழகினோம்...
என்பதால்
இப்போது எங்கள் தலைகள்
துடிக்க துடிக்க துண்டாடப்படுவது
சகசமாகிப் போனது .....

துண்டிக்கப்பட்ட தலைகள்
கீழே விழும் கணங்களில் தான்
மங்கிக் கொண்டிருக்கும்
எம் புலன்கள் உணர்கின்றன....
துரோகிகளிடமும்,
எதிரிகளிடமும்
எம் சந்ததிகளை அனாதைகளாக
விட்டு விட்டு இறந்து போகிறோமென......