Saturday, November 14, 2015

தினம் ஒரு ஈழத் தமிழ் சொல்.

மச்சாள் - மாமா மகள், சகோதரன் மனைவி.
மச்சான் - மாமா பையன், தங்கை கணவர் .

ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு வகையில் நேசிப்புக்குரியதாயும், மதிப்புக்குரியதாயும் இருப்பினும் மாமன் அல்லது மாமி மகன், மகள் உறவுகள் கால காலத்துக்கும்  இனிமையானவையும் அலாதியானவையுமாகும். உறவு முறைகளை சுட்டும் சொற்களில்  மச்சாள் , மச்சான் என்பது ழத்து பேச்சு வழக்கில் அத்தை அல்லது மாமாவின் மகள் , மகனை குறிக்க பயன்படுத்தும் வார்த்தைகளாகும்.

அக்கா கணவரை அத்தான் என்று அழைக்கும் வழக்கம் எங்களிடம் உண்டு. அதே போல் தங்கை கணவரை மச்சான் என்று அழைக்கிறோம்.
அதே போல் அத்தை பெண்ணையும் சகோதரன் மனைவியையும் மச்சாள் என்று அழைக்கிறோம். அண்ணன் மனைவியை அண்ணி என்றும் அழைக்கும் வழக்கம் இருந்தாலும் மச்சாள் என்பதே பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும் வார்த்தை எனலாம்.

இரண்டு மூன்று சகோதரர்கள் இருந்து அவர்களுக்கு மனைவிமார் வரும் பட்சத்தில் அவர்களுடைய வயது அல்லது அவர்கள் கணவரின் வயதை வைத்து பெரிய மச்சாள் , சின்ன மச்சாள் , குட்டி மச்சாள் என்றோ அல்லது அந்த மச்சாளின் பெயரை சேர்த்தோ அழைப்போம்.

உதாரணம் : ஸ்ரீதேவி என்பவர் தம்பி உதயனின் மனைவி. நிறைய தம்பிமார் இருப்பதால் அவரை பெரிய மச்சாள் என்றோ சின்ன மச்சாள் என்றோ குறிப்பிட்டு அழைக்க இயலாது.. அத்தகைய சூழலில் ஸ்ரீதேவி மச்சாள் அல்லது தேவி மச்சாள் என்று அழைப்போம். அதே போலவே மச்சானுக்கும்...

உதாரண வாக்கியங்கள் :

1) இண்டைக்கு என்ர ஸ்ரீதேவி மச்சாளுக்கு பிறந்தநாள்.
(இன்று என்னுடைய தம்பிமனைவி ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள்)

2) எங்கட பெரிய மச்சாள் தான் எங்கட வீட்டில அம்மாவுக்கு அடுத்தபடி..
(எங்கள் வீட்டில் எங்கள் அம்மாவுக்கு அடுத்து அண்ணி தான் எல்லாமுமே)

3) என்ர மச்சான் இருக்கிறவரை எனக்கு எந்த பயமுமில்லை
(என்னுடைய மைத்துனன் இருக்கும் வரை எனக்கு எந்த கவலையுமில்லை)

4) எங்கட மச்சான் / அத்தான்  வீட்டுக்கு வந்த நேரம் எல்லாம் நல்லபடியாக நடக்குது
(எங்கள் மைத்துனர் வீட்டுக்கு வந்த வேளை எல்லா விஷயங்களும் சுபமாக நடக்கிறது)

பிற்குறிப்பு:

எம்மவர்கட்கு! இதில் ஏதும் திருத்தம் வேண்டுமா என்று பார்த்துச் சொல்லுங்கள்....நாங்கள் எங்கள் குடும்பத்தில் வயதில் மூத்த மாமா பையனையும் அக்கா கணவரையும் அத்தான் என்றும் வயதில் குறைந்த மாமா மகனையும் தங்கை கணவரையும் மச்சான் என்றும் கூப்பிடுவோம்.. அதை வைத்தே இந்த பதிவை எழுதியிருக்கிறேன்... உங்கள் அபிப்பிராயம் என்ன?

தினம் ஒரு ஈழத் தமிழ் சொல்.

உறவுகளை இழந்தோம்; வீடு மனை வளவு சொத்து என்று எல்லாவற்றையும் துறந்து வந்தோம்;நாட்டையும் பறிகொடுத்தோம்.ஆனாலும் எம்முடன் கூடவே  நாம் சுமந்து வந்தது எமது   மொழியை  மட்டும் தான். ஆனால் புலம் பெயர் தேசங்களில் சடுதியில் இயந்திரமயமாகிப் போன வாழ்கையோடு போட்டி போட்டு ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாத நிலையில் கிடைத்த நேரத்தில் சாப்பிட்டு கை கழுவிவிட்டு நின்று பேசக் கூட  நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

அப்படி எங்கே  ஓடுகிறோம் என்ற இலக்கு எவருக்கு தெரிந்திருப்பதாக தெரியவில்லை... எனது மொழியில் எனக்கு பேசும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறேன்.. கூட இருந்து பேச ஆள் கிடையாவிட்டால் எனது மொழி எனக்கே மறந்து போய்விடுமோ என்ற பயம் இருக்கிறது..

புலனற்ற சுழிக்குள்ளிலிருந்து விடுவித்து சற்றேனும் ஆசுவாசமாக இருக்க இணையத்தின் தமிழும் தமிழறிந்த மனிதர்களும் உதவுகிறார்கள்.
அவர்களுடனான என் தொடர்புகள் பயனுள்ளதாக இருக்கும் பொருட்டு எனது பங்களிப்பாக இதை எழுதத் தொடங்குகிறேன்.

அதாவது ஈழத்தின் வட்டாரப் பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களை ஊரில் வாழ்ந்த போது எந்த வகையில் பேசித் திரிந்தோமோ அதே அழகுடன் , அதே பாணியில் முடிந்த வரையில் ஒவ்வொரு சொற்களையும் அதன் விளக்கங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

எங்கள் வட்டாரப் பேச்சு வழக்கில் பெரும்பாலான வார்த்தைகள் பண்டைய தமிழ் சொற்களின் மருவலாகவும்  வேறு சில பிறமொழிகளின் சொற்சேர்க்கைகளாகவும்  இருக்கும்.  எல்லா வார்த்தைகளும் எங்கனம் தோன்றியது , எப்படி மருவியது அல்லது எந்தச் சொல்லிலிருந்து மருவியது என்று எல்லாம் எனக்கு விபரமாக தெரியாது. தெரிந்தவற்றை மட்டும் பகிர்கிறேன். பலவற்றை இணையத்தில் தேடி எடுத்தும் பகிர்கிறேன்.

பழகிய மொழி...பிறந்து வளர்ந்ததிலிருந்து பேசிய மொழியும் அதன் வார்த்தைகளையும் அப்படியே அதே இயல்புடன் சுமந்து திரிகிறேன்.  அவற்றை கூடிய வரையில் நல்ல ஒரு படைப்பாக தர முயற்சிக்கிறேன்.