Wednesday, March 6, 2013

புல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்.......!

புல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்.......!



ம்... ம்... இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் தூண்டுதலில் பத்துப் பதினைந்து பெண்கள் கொடி பிடித்துக் கொண்டு போகும் ஊர்வலத்திலும் இன்று பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றிய கதைகள் பேசப்படலாம், பெண்ணியம் பற்றி ஆவேசமான கருத்து தர்க்கம் நடை பெறலாம், பெண் அடிமைத் தனம், பெண் சுதந்திரம் என்று கூச்சல் போடலாம். எல்லாம் அடங்கிப் போய் இன்றைக்கான கண்துடைப்பின் சரியான நிறைவேறலின் மகிழ்வில் தூங்கப் போகலாம்; நாளை மறந்து போகப்படலாம். அது தான் இன்றைய மகளிர் தினம். வழமையாக ஒவ்வொரு வருடமும் இப்படித் தானே நடந்து கொண்டிருக்கிறது எந்த வித்தியாசமும் இல்லாமல்??


 ஆனால் சமூகத்தில் பெண்களின் நிலமையில் நாளுக்கு நாள் எத்தனை எத்தனை வித்தியாசமான ஏற்றத் தாழ்வுகள்??முரண்கள்? முடங்கல்கள்?முடக்கபடல்கள் என்று தெரிந்து கொள்கிறோமா?? அவற்றைப் பற்றி ஆர்வம் காட்டப் போகிறோமா என்றால் என்னுடைய பதில் இல்லை என்பது தான்.


பெண்ணியம் என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் அநேகமானோரின் முகச்சுளிப்புக்கு இடமளித்துள்ளதே தவிர அதனுடைய தேவையைப் பற்றி பெண் இனத்தின் பெரும்பகுதியினரே புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விசயம். ஆணாதிக்கம், அடிமைப்படுத்தல் என்று கூச்சல் போடும் பெண்ணினத்தின் பெரும் பகுதி வெறும் கூச்சலுடன் தான் இதுவரை நிற்கிறது. தனக்கான பாதிப்பை புலம்பலில் மட்டும் வெளிப்படுத்துவதோடு அநேகமானோர் ஒதுங்கி, ஒடுங்கி விடுகிறார்கள்.   சூழல், குடும்பம், குழந்தைகள்,கலாச்சாரம் என்று பல  காரணங்களால் முடக்கப்பட்டு யாரும் அந்த பாதிப்புகளிலிருந்து தம்மை விடுவிக்க முற்படுவதில்லை.

பெண் என்றால் பொறுமையின் சின்னம், தியாகத்தின் திருவுருவம் என்று சொல்லிச் சொல்லி மூளைச்சலவை செய்யப்பட்ட  ஒரு இயந்திர மனப்பான்மை பெரும்பாலான பெண்களிடம் ஆழமாக வேரூன்றி இருப்பதால் எந்த அடிமைத்தனத்தையும், அடக்குமுறையையும் தாங்குவதும், அதை சமூகத்திடமிருந்து மறைப்பதும் தனது சிறப்பியல்பாக இவர்கள் நினைக்கிறார்கள்.இப்படிப்பட்ட பெண்கள் தான் ஆண்களை விட பெண்ணியம் என்றால் என்னவென்று தெரியாத அறியாமையிலிருப்பவர்கள். பெண்ணியத்தின் தேவையை பரப்ப நினைக்கும் உண்மையான  பெண்ணியவாதிகள் இவர்களைப் போன்றவர்களுக்கு தான் முதலில் புரியவைக்க முயல வேண்டும்.

பெண்ணியம் என்பது மற்றவர்கள் நினைப்பது போல் கலாச்சாரத்தையோ, பண்பாட்டையோ மீறவைக்கும் வழிப்பாதையல்ல. சமுதாயத்தில் சரி சம உரிமை என்பது ஏதோ பாவப்பட்ட செயலாக கருதுமளவுக்கு பெண்னினம் எதிலும் தாழ்ந்து போனதல்ல என்பதை பெண்களுக்கும், சமூகத்துக்கும் புரியவைக்கும் ஒரு சமூக சீர்த்திருத்தத்தின் தத்துவம் அது!


பெண்ணியத்தின் முதல் புரட்சி முன்னெடுப்பு இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தான் நடந்தேறியது. முதலாவது பெண்ணியப் புரட்சி 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டங்களிலும் நடத்தப்பட்டதாகவும், இரண்டாவது புரட்சி 1960, 1970களிலும் பின்னாளில் 1990 இலிருந்து இன்று வரையும் நடந்து கொண்டிருப்பதும் வரலாற்றுச் சான்றுகள் என்றால் உலகத்தில் மானுடம் தோன்றிய காலந்தொட்டு இந்த  குறிப்பிட்ட காலகட்டம்  வரை பெண்களின் நிலமை எத்தகையதாயிருந்திருக்குமென்று உணர்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் பகுத்தறிவுள்ள எவருக்கும் தேவையில்லை. ஏன் இப்போது கூட பெண்ணியம் என்ற தத்துவம் சமூகத்தில் வரவேற்புக்குரியதாயிருக்கிறதா அல்லது வெற்றி பெற்றிருக்கிறதா என்றால்...ப்ச் என்று உதட்டைப் பிதுக்கிக் கொள்கிறார்கள் மனித உரிமை சங்கங்களைச் சார்ந்தவர்களும், பெண்ணிய ஆர்வலர்களும்.

பெண்ணியம் என்ற சொல் எந்தவொரு மொழி பேசுகின்ற, எந்தவொரு இனம் சார்ந்தது என்ற தளநிலைகளில் இல்லாமல்   பாலியல் வேறுபாட்டால் மட்டும் வித்தியாசப்படுத்தப்பட்டு,இது வரை காலமும் ஒடுக்கப்பட்டு  இருந்து வரும் மானுடத்தின் மறுபாதிக்கான போராட்டம் அல்லது தீர்வு எனக் கொள்ளலாமா?? என்ற
இந்தக் கேள்விக்குப் பதில் தெரிய வேண்டுமானால், முதலில் பெண்ணியம் என்றால் என்னவென்று சரியான புரிந்து கொள்ளல் நம்மிடம் இருக்க வேண்டும்.

 பெண்ணியம் என்பது  பல்வேறு தளத்தில் ஆராயப்பட்டு வரும் பாரிய சமூக தீர்வுக்கான ஒரு போராட்டம் தான். பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY), உயிரியல் (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION), சக்தி (FORCE), மானுடவியல் (ANTHOROPOLOGY), உளவியல் (PSYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ள ஒரு பாரிய விடயம்.


பாலியல் ரீதியாய் பல நிலைகளில் பலவீனப்படுத்தப்பட்டதாயும், ஒடுக்கப்பட்டதாயும் இருக்கும் ஒரு மானுடத்தின் ஒரு பகுதி தனக்குரிய  சமத்துவத்துக்காக அறிவித்துள்ள, அல்லது ஆராய்ந்து கொண்ட  ஒரு  போராட்டம் என்று அறிவுறுத்த முற்பட்ட போது ஓர் முனைவர் என் முன் வைத்தை கேள்விகள் பின்வருமாறு:

  • பெண்ணியம் என்ற சொல்லின் பொருள் எல்லா நாட்டிற்கும் எல்லா இனத்திற்கும் பொதுவானதா? 
  • ஈழத்துப் போர்க்களத்தில் நின்ற பெண் போராளியைக் குறிக்கும் போதில், போர் மறவர் என்றே குறிப்பிட வேண்டும். அங்கே போர்க்களத்தில் நிகழும் நிகழ்சியைப் பெண்ணியத்திற்கு எதிராக நிகழ்த்தப் படுவதாகக் கூறுதல் பொருந்தாது.
  • அதேபோல், அரபு நாடுகளில் பெண்ணியத்தை என்னவென்று கூறுவது?
  • அஸாமில் பெண்ணின் வாழ்க்கை அமைப்பை எவ்வாறு கூறுவது?
  • தமிழகத்து கிராமத்துப் பெண்ணுக்கும் சென்னை போன்ற நகரத்துப் பெண்ணுக்கும் ஒரே வகையான பெண்ணியக் கோட்பாடு கூற முடியுமா?
  • பெண்ணியம் பற்றிப் பேசுகின்றவர் பெண்ணியம் என்றால் என்ன என்பதை விளக்கி அதை அனைத்துப் பெண்களும் ஏற்கச் செய்ய இயலுமா?
  • ஒரே கூட்டில் வாழ்கின்ற இரண்டு பெண்களுக்கு ஒரே வகையான பெண்ணியக் கொள்கை இருந்திடுமா?

இந்தக் கேள்விகள் எல்லாரிடமும் இருக்கும் . சிந்திக்க வேண்டியவை தான். ஆனால் உண்மையில் பெண்னியத்தின் முக்கியத்துவத்தையும், அதனுடைய உண்மையான அர்த்தத்தையும் சரியாகப் புரிந்து கொண்டால் முதல் கேள்விக்கான விளக்கமே மற்றைய கேள்விகளுக்குமான  பதில் என்பதை உணர முடியும்!

அதாவது  ஆண், பெண் என்ற பாலியல் வேறுபாட்டை வைத்தே சமூகத்தில் இரண்டு பிரிவுகளாக மானுடம் வித்தியாசப்பட்டிருக்கிறது. அதன் பின் பெண்ணினம் ஆணினத்தின் ஆளுமைக்குட்பட்டதாயும், இரண்டாம் பட்ச தர நிலைக்கு தள்ளப்பட்டதாயும், ஆண்வர்க்கத்தின் தேவைகளுக்கமையவே செயல்படும்  அடிமைக்குரிய  அந்தஸ்தில் தான் வர்க்கப்படுத்தப்பட்டுமிருக்கிறது. இந்த நிலைப்பாட்டின் வன்மையால் பெண்ணினம் பிற்படுத்தப்பட்ட ஒரு சூழலில் நின்றே எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.  இவை எல்லா நாட்டிலும், எல்லா மதம் சார்ந்த பெண்ணுக்கும், எந்த மொழி பேசும் பெண்ணுக்கும் ஒரே வகையான பாதிப்பைத் தான் விளைவிக்கும். அப்படியிருக்க நாட்டுக்கு நாடு  எப்படி பெண்ணியம் வித்தியாசப்படும் ??
உதாரணத்திற்கு பெண்ணியத்துக்கு எதிரான 'ஹானர் கில்லிங்' என்ற கௌரவக் கொலைகளை எடுத்துக் கொள்வோம். இவை அதிக பட்சமாக இஸ்லாமிய நாடுகளில் நடக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும் இஸ்லாமியம் சாராத மற்ற நாடுகளிலும் இன்று வரை நடந்து கொண்டு தானிருக்கிறது. ஒரு மானுடம் தன்னுடைய உரிமைகள் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் , அதன் விருப்பத்துக்கு மாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள விருப்பமின்றி அவற்றை எதிர்த்தால் அதற்குரிய பலாபலன் அந்த மானுடத்தின் ஆண் உறவுகளாலேயே கொல்லப்படுதல் கௌரவக் கொலைகள் எனில் இத்தகைய செயலை ஒரு நாட்டில் சரியென்றும், இன்னொரு நாட்டில் தகாது என்றும் பெண்ணியக் கொள்கையால் ஏற்றுக் கொள்ள முடியாது.  எந்த ஒரு இனத்திலும், எந்தவொரு மதத்திலும், எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய  கொடுஞ்சயல்கள் பெண்களுக்கெதிராக இழைக்கப்படுவதை பெண்ணியம் அனுமதிக்காது.

ஆனால்  கீழ் வரும் நாடுகளின்   சட்டமுறைகள் கௌரவக்கொலைக்கு சாதகமாக உள்ளன. எப்படியெனில்...:

ஜார்டன்: தண்டனை ஒழுங்கின் 240ம் ஷரத்தின்படி "எந்த நயாராவது அவர் மனைவியோ, குடும்பப் பெண்ணோ மற்ற ஆண்களுடன் கள்ளக்காதல் கொள்வது தெரிந்து அவளை கொன்றால் அல்லது காயப் படுத்தினால், அவர் தண்டனையிலிருந்து நீக்கம் அடைவர்."

சிரியா: ஷரத்து 548 படி "ஒரு ஆண் தன் குடும்பத்தின் பெண்ணை கள்ள காதல் செய்கைகளில் பிடித்து, மரணமோ, கொலையோ ஏற்ப்பட்டல், அவர் தண்டனையிலிருந்து நீக்கம்"

மொராக்கோ: தண்டனை ஒழுங்கு ஷரத்து 548 "கொலை, அடித்தல், காயமேற்ப்படுத்தல் இவை ஒரு கணவனால் கள்ளக்காதலுடைய மனைவியின் மேலேயோ அவள் காதலன் மேலேயோ செய்தால், அச்செய்கைகள் மன்னிக்கப்படும்"

ஹைடி: தண்டனை ஒழுங்கு ஷரத்து 269 " ஒரு கணவன் தன் மனைவியையோ அல்லது (பெண்) சகவசிப்பவரையோ கள்ளப் காம செய்கைகளில் கண்டுபிடித்து கொலை செய்தால், அவருக்கு மன்னிப்பு"

துருக்கி: துருக்கியில் கௌரவக்கொலை செய்தால் ஆயுள் தண்டனை கிடைக்கும்

அதே நேரம் பின்வரும் நாடுகளில் கௌரவக்கொலை சட்டத்திற்க்கு புறம்பானது ஆனால் மிகப்பரவலான முறையில் கௌரவக் கொலைகள் இந்நாடுகளில் நடக்கின்றன.

பாகிஸ்தான்: கௌரவக்கொலை பாகிஸ்தானில் காரி-காரோ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்தக் குற்றம் சாதாரணமான கொலையாக கருதப்பட்டு வந்தது;வருகிறது. பெரும்பான்மையாக நடந்த இத்தகைய கொலைகளை காவல் துறையும், நீதித்துறையும் கண்டுகொள்ளாமலே இருந்திருக்கின்றன. ஆனால்  சர்வதேச அழுத்தங்கள் காரணமாக  பாகிஸ்தான் டிசம்பர் 2004ல், இக்கொலைகளை தடுக்கும்படி சட்டம் இயற்றியது; இச் சட்டம் கொலையுண்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு கொலைகாரனால்  'தண்டனைப் பணம்' கொடுப்பது போல் அமைக்கப் பட்டிருக்கிறது. பாகிஸ்தானிய மாதர் நலச்  சங்கங்களும், மனித உரிமைக் கமிஷனும் இந்த சட்டம் ஒரு கேலிக்கூத்தென்றும், சர்வதேசத்தின் முன் ஒரு கண் துடைப்பெனவும் குரல் கொடுக்கின்றனர். காரணம் கருணைக் கொலைகளை பெரும்பாலும் ஒரு பெண்ணின் தகப்பனாரோ அல்லது சகோதரர்களோ தான் செய்கின்றனர்.  பாகிஸ்தானிய மனித உரிமை கமிஷன் அறிக்கை அறிக்கையின் படி, 1998ல் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 286 கௌரவக்கொலைகள் செய்யப்பட்டன. உண்மையான, தகவலறியப்படாத குற்றங்கள் இதற்க்கு மேல் பல மடங்கு. 4 வருடங்களுக்கு முன் முக்தர் மாய் என்ற பெண் 'கௌரவ கற்ப்பழிப்பி'ற்க்கு ஆளானார்.

பாலஸ்தின்: பாலஸ்தின் பெண்ணுரிமை அறிக்கையின் படி காசா, மேற்க்கு கரைகளில் 1998 மட்டுமே 20 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் தகவல் இல்லாமல் மேலும் பல பெண்கள் 'கௌரவ' கொலைக்கு ஆளாவதாக நம்பப்படுகிறது. 

 இது இப்படியிருக்க பின்வரும் தரவுகள் உலகத்தில்  ஜனநாயகத்திற்கு பெயர் பெற்ற அமெரிக்காவில் பெண்களின் நிலையைக் காட்டுகிறது.: (Consider the following from the US Department of Justice, General Statistics:)
  • ஒவ்வொரு 9 வினாடிகளுக்கொருமுறை, ஒரு பெண் அடித்து துன்புறுத்தப்படுகிறாள்.
  •  1992ல், அமெரிக்காவின் மருத்துவத் துறையின் கணிப்புப்படி 15-44 வயதுக்குட்பட்ட பெண்கள் அவர்களது கணவர்களாலும், காதலர்களாலும், மூர்க்கமாகத் தாக்கப்பட்டு, வன் கொடுமை, வன்புணர்ச்சி போன்றவற்றால் சித்ரவதைப்படுகிறார்கள்.
  •  அமெரிக்காவில் ஹோம்லெஸ் எனப்படும் வீடிழந்து தெருவில் வசிக்கும் பெண்களிலும் , குழந்தைகளிலும் 50% சதவீதமானோர் குடும்பத்தினரின் வன்முறைக்கு பலியானவர்கள்.
  • அமெரிக்காவில் விலங்குகளுக்கான புகலிடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக பெண்களுக்கான புகலிடங்கள்  இருக்கின்றன. 

ஜனநாயகத்துக்கும், சமவுரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்காவிலேயே பெண்களின் நிலை இப்படியென்றால் மற்றைய நாடுகளில் எப்படியிருக்குமென்று சொல்ல வேண்டுமா??

பெண்களும் சிறுமிகளும் பெண் சிசுக்கள் உட்பட வருடத்திற்கு 5000 பேர் அவர்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்படுகின்றனர் என்பது சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு. இக் கொலைகளில் 99% சதமான கொலைகள் கற்பு, நடத்தை, வாழ்வியல் கோட்பாடு, மதக் கொள்கை என்ற போர்வையில் பெண்ணினத்தைக் கடுமையாக ஒடுக்கி வைத்திருக்கும் கலாச்சார பின்புலன்களில் ஊறியவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

கடுமையான கலாச்சாரக் கட்டுப்பாடுகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் இனங்களைச் சேர்ந்த குடும்பங்களில் இருக்கும் பெண்கள் தமது கலாச்சாரத்துக்கோ, இன, மதக் கொள்கை - கோட்பாடுகளுக்கோ புறம்பான உறவு, நடத்தை வழிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில் அத்தகைய உறவு முறைகளை அல்லது நடத்தையைத் தமது குடும்பத்துக்கும் மதத்துக்கும் இனத்துக்கும் இழைக்கப்படும் பேரிழிவாகக் கருதி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் இத்தகைய படு பாதகமான, கொடூரமான மூர்க்கத்தனமான முறையில், தான் பெற்ற மகள் என்றோ, தன் சகோதரி என்றோ, தன் பேத்தியென்றோ, மனைவி என்றோ, தாயென்றோ உணர்வேதுமில்லாமல் அந்தப் பெண்களைக் கொலை செய்கின்றனர்.

இத்தகைய செயல்கள் எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இத்தகைய செயல்கள் நடக்காதபடி ஒழிக்கப்பட வேண்டும். அப்படியானல் பெண்ணியம் என்பது சகல சமூகத்துக்கும் பொதுவானதாயிருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.  இல்லை என்று எவரவது மறுதலித்தால் அவர்கள் கௌரவக் கொலைகள் போன்றவற்றை  பகிரங்கமாகவே ஆதரிக்கிறார் என்று தான் அர்த்தம்; அப்படிப்பட்டவர்களின் மனோநிலையை மாற்றியமைக்க வேண்டிய தார்மீகக் கடமை பெண்ணியவாதிகளிடமிருக்கிறது.

இன்றைக்கும் தமிழகத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் கணவனாலும், கணவன் வீட்டாராலும் மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதைக்குட்படுவதும், கொல்லப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது; இன்று வரை தலித் இன பெண்கள் மேல்தட்டு ஜாதி வர்க்கத்தினரால் வன்புணர்வுக்குட்படுவதும், பாலியல் வன்கொடுமைக்குட்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு தானிருக்கிறது என்றால் இதை ஒழிக்க தமிழ் சமுதாயம் இதுவரை என்ன செயற்பாட்டில் இறங்கியிருக்கிறது? காவல் துறை மற்றும் ம்னித உரிமை சம்மந்தப்பட்ட பாதுகாவலர்களும் என்ன சாதித்திருகின்றனர்??

வெறும் போலி சாமியார்களின் ஊழல்களையும் வேஷத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட பெண்களின் அந்தரங்கங்க நடத்தைகள் தான் ஊடகங்களுக்கே தேவைப்படுகிறது என்றால் பெண்ணியத் தத்துவத்தை எப்படி ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் வித்தியாசப்பட வைக்க முடியும்??

பெண்களுக்கான பாதுகாப்பு சம்மந்தப்பட்ட சமூக சீர்த்திருத்தத்திற்கு முக்கிய தேவை பெண்ணியத்தின் அறிவு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்பது மட்டுமல்ல அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் தான். 

இத்தகைய கொடும் செயல்களை உலகில் உலவ விடுவது மனித சமுதாயத்துக்கே இழுக்கு. இவற்றைத் தட்டிக் கேட்கும் திராணியில்லாத எமக்குப் பெண்ணியம், பெண் விடுதலை, சமத்துவம் என்று சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது? தாய் நாடு என்கிறார்கள்; தாய் மொழி என்கிறார்கள்; இயற்கையையும் சக்தியையும் பெண்ணாகவே கருதுகிறார்களாம்... ஆனால் பிறப்பால் ஆண்களுடன் இருக்கும் எம்மைப் பெண்ணாக மனிதாபிமானத்துடன் மதிக்கிறார்களா? இல்லை...!!

நாங்கள் பங்கெடுத்தால் தான் குற்றவாளிகளா? இல்லை.. இன்னமும் இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளை மௌனமாக வேடிக்கை பார்ப்பதாலும் குற்றவாளிகள் ஆகின்றோம். சரி.. பெண்ணாகிய நாம் எங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறோம்??

குடும்பத்தினரால் கொல்லப்படும் இந்த ஹானர்ஸ் கில்லிங் கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.சி.ஏ.ஹெச்.கே (International Campaign Against Honour Killings) என்ற அமைப்பு. பெண்ணினத்தை ஒடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதும், உதவுவதும் இவ்வமைப்பின் நோக்கம். மேலதிக விபரங்களுக்கு http://www.stophonourkillings.comஎன்ற இணையத்தை பார்வையிடவும். கௌரவக் கொலைக்கு உதாரணமாக இந்தக் காணொளியையும் பாருங்கள். கௌரவக் கொலைகள்!



பாதுகாப்பற்று, சாவின் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு பெண்ணுக்கும் தகுந்த ஆலோசனைகளை இந்த அமைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது. மிகவும் அந்தரங்கமான, ரகசியமான ஆலோசனைகளுக்கு இந்த அமைப்பினரின் கீழ்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்: Nina:  ninasalih@googlemail.com.

மேலதிக விபரங்களுக்கு: ICAHK's founder Diana Nammi : diana.nammi@gmail.com

தொலைபேசி: l +447862733511

இந்த குறிப்பிட்ட தொலைபேசியுடன் எல்லோராலும் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். அப்படியான சூழ்நிலையிலிருக்கும் பெண்கள் தமது பாதுகாப்புக்காக வேறு ஏதாவது வழிகளில் முயற்சிக்க வேண்டும். அண்மையிலிருக்கும் மாதர் சங்கங்களையோ, மகளிர் காவல் நிலையங்களையோ தயங்காமல் நாட வேண்டும். ஆபத்து வரும் வரை காத்திராமல் முதலிலேயே வரும் முன் காப்பவளாயிருக்க வேண்டும். தனது அந்தரங்கங்களை  பகிர பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை..அதிலும் தனது கணவனோ அல்லது கணவர் வீட்டாரோ செய்யும் கொடுமைகளை பயம் காரணமாகவோ அல்லது அவமானம் கருதியோ வெளியிட மாட்டார்கள். ஆனால் அவளுடைய உயிருக்கே ஆபத்தான நிலையிலிருக்கும் போது இப்படி தனக்குள் எல்லாவற்றையும் அமுக்கி வைக்கப் பழகிக் கொள்வது மனோரீதியாகவும், உயிருக்கும் ஆபத்தானதே..! தன்னுடைய மனநிலையையும் சரி, சூழ்நிலையையும் சரி  நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


எமது கலாச்சாரக் கட்டமைப்பு ஒரு பெண்ணின் வாழ்கையை அவளை முதன்மையாக அடையாளப்படுத்துவதை தவிர்த்தே வந்திருக்கிறது. கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அவள் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டியவளாகவே இயக்கப்படுகிறாள். பிறந்த வீட்டிலிருப்பவர்கள்  ஒரு பெண்ணை  புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கும் போது "கணவன் வீட்டில் என்ன நடந்தாலும் அவள் அவற்றைத் தாங்கிக் கொண்டேயாக வேண்டுமென்ற கட்டாயத்தை போதனையாக உருப்போட பழக்கப்படுத்தப்பட்டவளாக  அனுப்பி வைக்கிறார்கள்.

இப்படியான சூழலில் வாழும் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் தம்மைத் தாமே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் சுதந்திரமும் பாதுகாப்பும் எங்களுடைய கவனத்தில் மட்டுமே தங்கியிருக்கின்றது. வரதட்சணைக் கொடுமையோ, அல்லது கொடுமைப்படுத்தும் கணவனின் வன்முறையோ அல்லது வன்புணர்தலுக்கு முயல்பவர்கள் பற்றியோ உடனடியாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். வன்முறைகளைச் சகிக்கும் எந்தப் பெண்ணும்  முட்டாளே.

உங்கள் குடும்பத்தார் மூலம் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் உடனடியாக உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவருடன் அதைப் பற்றி சொல்லிவிடுங்கள்.

பெண் சமுதாயம் இற்றைத் திகதிகளில் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பது கேள்வி என்றால் சகல துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு பரவியிருக்கின்றது என்பது மேம்போக்கான விடை மட்டுமே. சமூக ரீதியாக, சராசரியாக சொல்லப்படும் ஒரு நிகழ்தகவு தான் பெண்ணின் முன்னேற்றம் என்பது.

ஆனால் தனிப்பட்ட வாழ்கையில் ஒவ்வொரு பெண்ணிற்கும் உடலியல், உளவியல், கருத்தியல் ரீதியாக எந்தவொரு முன்னேற்றமும் இதுவரை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றும் பெண் சிசுக் கொலை நடந்துகொண்டு தான் இருக்கிறது. போன வருடத்தை விட இவ்வருடம் கொஞ்சம் குறைந்துள்ளது என்ற ரீதியான தகவலே தவிர முற்றாக நிறுத்தப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயம். வரதட்சணை, பாலியல் வன்முறை, வன்புணர்தல், கொலை போன்றவை பெண்ணினத்துக்கு எதிராக இன்றும் நடைபெற்று வருபவையே..!

பெண் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு முதல் காரணம் அவள் தான். தாரமாவதற்காகவும் தாயாவதற்காகவும் மட்டுமே பெண் என்பவள் படைக்கப்படுவதாய் நினைத்துவிடுகிறாள். அவள் குடும்பம், பாசம், அன்பு என்று முழு ஈடுபாட்டுடன் ஐக்கியமாகிவிடுவதால் தன் வாழ்கையில் முக்கியமான உறவுகளிடம் பலஹீனமாகிவிடுகிறாள். அவளுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையே பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மிகப் பரந்த இந்த உலகத்தில், வாழ்கை என்பது பலவித கோணங்களிலிருந்து ரசித்து, உணர்ந்து அனுபவிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பம். அதைப் பெண் என்பவள் மற்றவர்களால் விதிக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் முடங்கி மற்றவர்கள் எதிர்பார்ப்பிற்கமைய வாழ்வதை விதியாக ஏற்றுக்கொள்வாள் என்றால் அவளுக்கு வாழ்கை என்பதே அனாவசியம். அந்த வாழ்கையில் எந்தவொரு சுயமும் இல்லை.

எந்த ஒரு பெண் தன் கருத்துகளுக்கு அமைய, தன்னுடைய சொந்த உணர்வுகளால் மட்டுமே வாழ்கையை வாழத் தலைப்படுகிறாளோ அந்தப் பெண் சுதந்திரமானவளாகக் கருதப்படுவாள். அப்படி ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே அடையாளப்படுத்திய தனது வாழ்கையை வாழத் தலைப்படும் போது தான் பெண்ணியம் முதல்படியாக தனது வெற்றியை நோக்கி பயணிப்பதாக அமையும்.