Thursday, December 10, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்


 சொதி

சொதி,/ ஆணம் (மட்டகளப்பு.பேச்சுத் தமிழ்) (பெயர்ச்சொல்)

ஈழத்து சமையலில் உணவுகளின் பெயர்கள் கூட சிலது வித்தியாசமானவை; எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது சன் தொலைக்காட்சியில் கிராமத்து விருந்து என்ற சமையல் நிகழ்ச்சியில் பரவை முனியம்மா அவர்கள் கிராமத்து சமையல் குறிப்புகள் தருவார். அப்போது ஒரு நாள் கோவக்காய் பால் கறி செய்து காட்டினார். அந்த குறிப்பினூடாக அவர் சொன்ன இன்னொரு விசயம் “கோவாக்காயில் மாத்திரமே பால்கறி செய்யக் கூடியதாக இருக்கும். கத்தரிகாய் போன்றவற்றில் பால்கறியே செய்ய முடியாது என்று சொன்னார்”. ஆனால் எங்கள் வீடுகளில் ஆட்டிறைச்சிக் குழம்புக்கு காம்பினேஷனே கத்தரிக்காய் பால் கறி தான் முதல் தேர்வாக இருந்து வருகிறது கால காலமாய்.

இது போல சொதியும் எமது சமையலில் மிக முக்கியமானது. தமிழ் நாட்டு மக்கள் சமையலில் நான் அதை கண்டதில்லை.ஆனால் இணையத்தில் தேடிய போது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண விருந்துகளில் சொதி பரிமாறப்படுவதாக படித்தேன்.

நெல்லை சீமை சொதியின் சமையல் செய்முறை எம்மவர்களின் சொதியுடன் கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. (http://9-west.blogspot.com/2008/08/blog-post_22.html)

மாப்பிள்ளை சொதி என்று இன்னொரு வகைச் சொதிக் குறிப்பும் பார்த்தேன். (http://www.eegai.com/blog/mappillai-sodhi-recipes-2.html)இந்த சொதியில் பாசிப்பருப்பு கூட போடுகிறார்கள் .

நம்மவர்கள் செய்யும் சொதி குழம்பு போல் கெட்டியாக இருக்காது. நீர்த்தன்மை அதிகமானதாக இருக்கும்.

ஈழத்தில் தமிழில் சொதி என்றும் சிங்கள பிரதேசங்களில் ஹொதி என்றும் சொல்லப்படுகிறது. சொதிக்கு “ஆணம் “ என்று இன்னொரு பெயரும் உண்டு.

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி , உப்பு , சிட்டிகை மஞ்சள் பொடி எல்லாம் சேர்த்து கப்பி பாலில் கொதிக்க விட்டு மிளகாய் வெங்காயம் அவிந்ததும் இரண்டாம் பால் , கடைசியில் முதலாம் பால் விட்டு இறக்கி ஆறினதும் எலுமிச்சம் புளி பிழிந்து விட வேண்டும். இது தான் சாதரணமாக பால் சொதி செய்யும் முறை. வாசனைக்கு கடுகு, கறிவேப்பிலை தாளித்தும் போடுவார்கள்.

அல்லது கொஞ்சம் புளி+சிவப்பு வெங்காயம்+உப்புக்கலந்து பிசைந்து கொஞ்சம் வெந்தயம்+கறிவேப்பிலை போட்டு தேவைக்கு அளவாக தண்ணீர் ஊற்றிக்கொதிக்க விட வேண்டும். நன்றாகக்கொதித்ததும் ' அடுப்புச்சூட்டை குறைத்துவிட்டு அல்லது நிற்பாட்டிப்போட்டு 'பால்விட்டு" கரண்டியால் 'ஆத்திவிட்டுவிட வேண்டும்.

பிறகு...'தாளிதம்' சேர்த்தால்...சொதி ரெடி!

 
அதே சொதியில் கப்பி பாலில் மீன் தலை , மீன் துண்டம் போட்டால் மீன் சொதி, கருவாடு போட்டால் கருவாட்டு சொதி, உருளைக் கிழங்கு போட்டால் உருளைக்கிழங்கு சொதியாகிவிடும் .

எங்கள் ஊரில் முரல் மீன் சொதி மிகப் பிரசித்தி பெற்றது.  உடன் முரல் மீன் போட்டு செய்த சொதியுடன் அரிசி மா பிட்டும் சாப்பிட்டால் அப்படி ஒரு சுவை.

மாதகல் முரல் சொதியும் புழுங்கல் அரிசி சோறும் 
அராலிக்கடல் பாலைமீன் பாற்சொதி வெள்ளைப்பச்சை அரிசியில் சமைத்த சோறு  பொன்னாலைக்கடலில் பின் நேரத்து சினாது மீன் குழம்பு சொதி இடியப்பம் என்று சொதியும் அதன் காம்பினேஷனும் எங்கள் ஊரின் சமையல் சுவைக்கு பெயர் போனவை.  சொதியின் புளிப்பு தன்மையை அதிகப்படுத்த தக்காளி, மாங்காய் துண்டங்களும் சேர்ப்பதுண்டு.


இதை இடியப்பம், புட்டு, சோறு போன்ற உணவு வகைக்கு விட்டு பிசைந்து சாப்பிடுவோம். எங்கள் சமையலின் கறி வகைகள் குழம்பாக இருந்தாலும் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். அந்த கெட்டியான கறிகளுடன் இடியப்பம், புட்டு போன்றவை சாப்பிட்டால் தொண்டையை அடைக்கும்.. அதனால் சொதி நிறைய விட்டு கொஞ்சம் நீர்பதமாக பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும். குழந்தைகள் உறைப்பான காரமான உணவு வகை சாப்பிட மாட்டார்கள்..அவர்களுக்கும், சரியாக பல் முளைக்காத குழந்தைகளுக்கும் , பல் விழுந்த தாத்த பாட்டிக்கும் உணவை மென்மையாக்கி பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும்.

அது மட்டுமல்ல காரமான கறிகளினால் தொண்டையிலும் குடலிலும் ஏற்படவல்ல எரிவிலிருந்தும் , புண்ணிலிருந்தும் தடுக்கும் ஒரு சமநிலை உணவாக சொதியை எடுத்துக் கொள்ளலாம்.

உதாரண வாக்கியங்கள்:
1) இரவைக்கு சொதியும் இடியப்பமும் தான் சாப்பாடு.
(இரவு உணவாக இன்று இடியப்பமும் சொதியும் இருக்கும்)

2) புட்டு தொண்டைக்குள் அடைக்குது. கொஞ்ச சொதி இருந்தால் நல்லா இருக்கும்.

3) கறி ஒண்டுமில்லாட்டில் ரெண்டு உருளைக் கிழங்கை சீவி பொரிச்சு எடுத்து சொதியோட சாப்பிடலாம்.
( சாதத்துக்கு குழம்பு எதுவும் இல்லையென்றால் உருளைக்கிழங்கு வறுவலும் சொதியும் சேர்த்து சாப்பிடலாம்)

No comments:

Post a Comment