Wednesday, November 13, 2013

தமிழக அரசியல்வாதிகளும்...நாங்களும்...!! பகுதி 1


தமிழக அரசியல்வாதிகளை என்றைக்கும் நம்பக் கூடாது என்று நான் எழுதினால் அரசியல் அறிவில்லாதவள், காழ்புணர்ச்சியுடையவள், இராசபக்சேயைக் கூட இந்தளவுக்கு விமர்சிக்காதவள் என்றெல்லாம் என்னை தூற்றியவர்கள் உண்டு. அவர்களை நான் என்றைக்கும் வெறுத்ததில்லை. ஏன் என்றால் அவர்கள் என்னை தூற்றும் போது கூட அக்கா என்று அழைத்து தான் விமர்சிப்பார்கள். என்னுடைய கருத்துகளையும் கடந்து நானும் அவர்களை சகோதரர்களாகவே பார்க்கிறேன். ஏனென்றால் நம் இரு பிரிவினரும் சாதாரண மக்கள்.

ஆனால் எங்கள் இருவருக்குமே வித்தை காட்டும் இன்னொரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்களை அரசியல்வாதிகள் என்று சொல்கிறோம். அவரவர் தங்களுக்கு பிடித்த அரசியல்வாதிகளுக்காக என்னுடன் வாதாடுகிறார்கள். தான் நம்பிய தலைவரை அக்காவிடம் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதும், அந்த தலைவரை இன்னொருவர் காட்டமாக விமர்சிப்பது தான் நம்பிய கொள்கையையும் பின்தொடர்தலையும் கூட அவமதிப்பதாக கருதுகிறார்கள் அந்தச் சகோதரர்கள். அவர்கள் தங்கள் தலைவரின் எந்த செயலை இன்னொருவர் விமர்சித்தாலும் நாகரீகமானவர் எனில் சில பல எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள் என்ற பெயரில் பதிலளிப்பார்கள். சபை நாகரீகத்தைப் பற்றி அக்கறையற்றவர்களாயின் தூஷணைகளால் அர்சிப்பார்கள். அவ்வளவு தான். அதற்கு பயந்து நான் என்னுடைய கருத்துகளைச் சொல்லாமல் இருக்க முடியுமா??

அரசியலில் ஒரு துண்டு சால்வையை வைத்து எத்தனை தடவை கட்சிக்கலர் கரையை மாற்றி மாற்றி வித்தை காட்டும் இந்த அற்பத்தனமான அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் கடைசி வரை தன் நிலையிலிருந்து மாறாத எதிரிகளுடன் இணக்கமாக போக எத்தனையோ வழிகள் , சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அடிபணியாமல் , மக்களோடு மக்களாக போராளிகளோடு களத்தில் போராளியாக தன் குடும்பம் முழுவதையும் பலிகொடுத்த எங்கள் தலைவரை நாங்கள் எப்படி எல்லாம் பூசிப்போம்? ! எங்கள் மனநிலையில் ஒரு வினாடியாவது நீங்கள் இருந்து பார்க்க வேண்டும்...!

 ஒவ்வொரு தடவையும் உங்கள் அரசியல்தலைவர்கள் ஈழம் , ஈழத்தமிழர், முள்ளிவாய்க்கால், பிரபாகரன்,இசைப்பிரியா என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் போதெல்லாம் நீங்கள் இந்தியாவிற்குள் இருக்கும் தமிழக அரசியல்கட்சிகளுக்கு வாக்களிக்கும் மக்களாக - ஈழத்தமிழருக்காக பரிதவிக்கும் தொப்புள் கொடிகளாக இருக்காமல்,  போரில் உறவுகளைப் பறிகொடுத்த நாங்களாக இருங்கள்....! இவர்கள் சொல்லும் அத்தனை சமாதானக்களில், சப்பைக்கட்டுகளில் எதையாவது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று எனக்கு சொல்லவேண்டாம். உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்...போதும்!!

இத்தனையும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் கீழே நீங்கள் மதிக்கும் அரசியல்வாதிகளிடம் தான் சில கேள்விகளை கேட்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது. அவற்றை நான் கேட்டால்
ஒரு சாரா(கோதர)ர் நாங்கள் தான் இந்த திடலை கட்டினோம் என்பீர்கள். இன்னொரு சாரா(கோதர)ர் எங்கள் தலைவர் தான் திடல் கட்ட இடம் கொடுத்தார் என்பீர்கள். மற்றொரு சாரா(கோதர)ர் எங்கள் ஐயா தான் திறந்து வைத்தார் என்பீர்கள்.  இடித்தவர்களும் வேறொரு சாரா(கோதர)ர் மதிக்கும் தலைமை தான்...!! இவர்களை ஆதரித்தால் தான் காங்கிரசையும் திமுகவையும் விரட்டலாம் என்ற அரசியல் சாணக்கியம் பேசிய தலைவர்கள் வேறு எங்கிருந்தும் வரவில்லை...! (இனி இவர்களை விரட்ட திரும்ப யாரை வரவழைப்பீர்களோ?)

எம் சகோதரர்களே...நீங்கள் மதிக்கும் அரசியல்வாதிகளிடம் தான் கேட்கிறோம்.....

எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்து எங்களை சிங்களவன் இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்தான்....அவன் எதிரி!

நீங்கள் ஒரு சாரார் எங்கள் மக்களுக்காக நினைவுத்திடல் கட்டினீர்கள்...திறப்புவிழா நடத்தினீர்கள்...மிக்க நன்றி...!!


இப்போது ஏதோ நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக காரணம் காட்டி சுற்றுச் சுவரை இடித்தும் விட்டீர்கள் இன்னொரு சாரார்.... சிங்களவனை விட வேக வேகமாக..!!

இப்போது உங்களை நாங்கள் இனி எந்த பட்டியலில் சேர்ப்பது??

உணர்வும், பறிகொடுத்த வலியும் அனுபவிக்கும் எமக்கு எங்கள் மாவீரர்கள் இரண்டாம் ஆண்டவர்கள். அவர்களுக்கான துயிலும் இல்லங்கள் எங்களுக்கு கோவிலைப் போன்றவை. முள்ளிவாய்கால் என்ற வார்த்தை எங்கள் வரலாற்றில் உயிரோடு பதைக்க பதைக்க எங்கள் இனம் கொடூரமாக அழிக்கப்பட்ட (holocaust) அடையாளம். ஈழத்தில் அமைக்கமுடியாத ஒரு விசயத்தை , இன்னலுறும் ஈழத்தமிழரின் ஒரு அடையாளமாக , வரலாறு சொல்லும் சாட்சியாக இந்த திடல் இங்கிருக்கட்டும் என்ற நோக்கம் தமிழக மக்களிடம் இருந்தது.

மக்களின் பார்வைக்கு எதிர்மாறாகத் தான் அரசியல்வாதிகளின் கணிப்பு இருக்கும் என்பது எமக்கு தெரியும். இனி இந்த முள்ளிவாய்க்கால் திடல் அரசியல்வாதிகளிடம் சிக்கி எப்படியெல்லாம் சீரழியப் போகுதோ என்ற கேள்வி ஈழத்தமிழர்களிடம் இருந்தது. அதனாலேயே ஈழத்தமிழர் பலர் இந்த திடல் பற்றி கருத்து வெளியிட விரும்பவில்லை.  ஆனால் பலர் வெளிப்படையாகவே எதிர்ப்பை தெரிவித்தனர்..!

நாங்கள் எதிர்பார்த்தபடி தான் தம்பிங்களா உங்கள்  அரசியல்வாதிகளின் நோக்கங்கள்.  இந்த திடலை வைத்து இனி எப்படி ஒவ்வொருவரும் அரசியல் காய்களை நகர்த்தலாம் என்று தான் திட்டமிடல் இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்கப் போவதில்லை.எங்கள் எதிர்பார்ப்பு சரியாக இருந்தது. ஆனால் இந்தளவு அவசர அவசரமாக மூன்று நாட்களுக்குள்  போட்டியைத் தொடங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை...தான்!! 

ஈழத்தமிழர்களாகிய எங்களுக்காக தமிழுணர்வாளர்கள் போராடினார்கள்; தங்கள் உயிரை துச்சமாக மதித்து தியாகம் செய்தார்கள்; தீக்குளித்தார்கள். அவர்களின் கனவும் ஈழத்தமிழருக்கானதாகவே இருந்தது. இவர்கள் முன் இந்த அரசியல்வாதிகள் எல்லாரும் அற்பமானவர்கள். இந்த தெளிவு எங்களிடம் இருக்கிறது. 

ஆக இந்த அரசியல்வாதிகளுக்கிடையில் நைந்து  நையப்புடைந்து வெறுத்துப் போக போவது என்னவோ மக்களாகிய நீங்களும் நாங்களும்...பாவம் நெடுமாறன் ஐயாவையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்....இந்த மனுசர் தன் கட்சிக்காகவோ , தன் குடும்பத்துக்காகவோ,தனக்காகவோ  என்றில்லாமல் ப்பாவம் ஈழத்தமிழருக்காக தெருதெருவாக நின்று போராடி சீரழிகிறார்...!  :(

ஆனால் ஒன்று.......
இனி எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் “இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு திடல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு செப்பனிட்டு தருவோம்” என்று ஒரு வாக்கியத்தை அறிகையாக வைக்கலாம். - ஆக அரசியல்வாதிகளுக்கு இலாபம் தான் எப்படிப் பார்த்தாலும் ..!! 

2 comments:

  1. அதற்கு பயந்து நான் என்னுடைய கருத்துகளைச் சொல்லாமல் இருக்க முடியுமா??

    ~ முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...முடியவே முடியாது..! :)

      Delete