Friday, October 11, 2013

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்....

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்.... 


படித்தது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி. கிறிஸ்துவப் பாடசாலை. ஆனால் எல்லா சமயத்தவருக்கும் பிராத்தனை இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பக்திப் பாடல்களும், சிவபுராணமுமாய் பொன்னையா மிஸ்ஸின் இனிமையான 
குரலில் பாடக் கேட்பதே ஒரு பரவசமான விசயம் தான். அதுவும் அவர் எம்.எஸ்.எஸ் அம்மாவின் காற்றினிலே வரும் கீதம் பாட்டைப் பாடும் கிடைக்கும் சந்தோசம் இருக்கே....இத்தனை வருசம் ஆகியும் அந்தக் குரல் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை.

வருடா வருடம் நத்தார் பெருநாள் எந்தளவுக்கு சிறப்பாக கொண்டாடப்படுமோ அதே அளவு சிறப்பாக சரஸ்வதி பூசையும் கொண்டாடுவோம். நல்லூர் வீராளி அம்மன் கோவிலுக்கு கிட்ட இருக்கும் ஒரு மண்டபத்தில் தான் எங்கள் பள்ளிக்கூடத்து சரஸ்வதி பூசை கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
சரஸ்வதி பூசை கலை விழாவில் ஒவ்வொரு வகுப்பினரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி கொடுப்பார்கள். நாடகம், பாட்டு, வில்லுப்பாட்டு, நடனம், கோலாட்டம் என்று ஒரு பல்சுவை நிறைந்த கலைவிழாவாக அதிலும் விசேசமாக என்னுடைய வகுப்பு தோழி நளாயினியின் அக்காக்கள் இருவரின் பாம்பு, மயில் நடனம், தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஒரு தாம்பாளத்தின் விளிம்பில் நின்று ஆடும் நடனமுமாய் என்னவொரு சந்தோசமான கலைவிழாவாக அவை இருந்திருக்கின்றன தெரியுமா???

எல்லா மாணவிகளுக்கும் சரஸ்வதி பூசை எப்ப வரும் என்ற ஏக்கம் இருக்கும் ..காரணம் அன்றைக்கு நாம் எல்லாம் பள்ளிச்சீருடைக்கு டாடா பை பை...தான்... பட்டுப் பாவாடை சட்டை என்ன, பாவாடை தாவணி என்ன... அல்லது வூலி நலைக்ஸ் , காஷ்மீர் ஸில்க், ஷிபான் கிரேப் சேலை என்ன என்று அழகழகான வண்ணாத்துப் பூச்சிகளாக , பூச்சரமும், காப்பு, சங்கிலியுமாய் அலங்காரங்களுடன் தோழிகளுடன் சந்தோசமாக கழிக்கும் நாள்.

கலை நிகழ்ச்சி முடிய கிடைக்கும் அவல், சுண்டல், பொங்கல், வடையை விட சேலை கட்டக் கிடைத்த சந்தோசமும், வெட்கமும், பூரிப்பும் தான் அதிகமான விசேசமாக இருக்கும்..!

பள்ளியின் நாலு சுவருக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவிகள் அன்றைக்கு ஒரு நாள் சுதந்திரச் சிறகு முளைத்திருக்கும் பட்டாம் பூச்சிகளாக ஆசிரியர்களின் துணையுடன் வீதியில் நடந்து மண்டபத்துக்கு போவோம். போகும் போது பக்கட்தில் இருக்கும் சென்.ஜோன்ஸ், சென்.பற்றிக்ஸ், பாடசாலை இளவட்ட மாணவர்கள் அவரவர் சைட் அடிக்கும் மாணவிகளைப் பார்க்க சைக்கிளில் வந்து சுழட்டிக் கொண்டு போவதும், கடைக்கண்ணால் பார்த்து தோழிகளுடன் கதாநாயகிகள் கிலுகிலுத்துக் கொண்டு போவதும்.........அதை வேடிக்கை பார்க்கும் சைட் அடிக்க ஆளில்லாத இரண்டாம் கதாநாயகிகளான நாங்களும், புரிந்தும் புரியாதவர்கள் போல் “கேர்ள்ஸ்...அங்க என்ன சிரிப்பு...ஒழுங்கா லைன்ல வாங்கோ பாப்பம்” என்று அதட்டும் ஆசிரியர்களுமாய்.........அடடா....!

எல்லாம் வருசா வருசமும் கொண்டாடும் சரஸ்வதி பூசை கலை விழாவில் எத்தனை வித்தியாசமான புது புது கலை நிகழ்சிகளை நடத்தினாலும் என்னுடைய வகுப்பு தோழி நளாயினியின் அக்காக்கள் இருவரின் பாம்பு, மயில் நடனம், தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஒரு தாம்பாளத்தின் விளிம்பில் நின்று ஆடும் நடனமும், கொலு படியின் முன்னால் மாணவிகள் கோரஸாகப் பாடும் ”வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்” என்ற இந்தப் பாட்டும் எல்லா வருசமும் மாறாமல் இருக்கும். இப்போது இந்தப் பாட்டை கேட்கும் நேரங்களில் திரும்பவும் பழைய பள்ளிக்கூடத்தில் போய் அதே தோழிகளுடன்...அதே ஆசிரியர்களுடன், அதே வகுப்பு மேசையில் இருக்க இன்னொரு சந்தர்ப்பத்தை இந்த வாழ்கை தராதா என்ற ஏக்கம் மனதை வாள் மாதிரி அறுக்கிறது.

No comments:

Post a Comment