Wednesday, November 27, 2013

தாயகக் கனவுடன்.....


இந்தப் பாடலை ஏதோ ஒரு காரணத்தில் மற்ற நாட்களில் வாய் முணு முணுத்து விட்டால் எப்படியும் கனநாளைக்கு அந்தப் பாடல் தான் மூளைக்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் இசைத்துக் கொண்டிருக்கும்...!
உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள், உறவினர் வந்துள்ளோம்.

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே எங்கே, ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே, ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் 


என்ற வரிகள் கண்ணீரைத் தாண்டி என்றைக்குமே போனதில்லை....! வாய் முணு முணுக்கும் பாடல் அங்கேயே உறைந்து உடைந்து விடுகிறது...கண்ணீர் தானகவே உருளத் தொடங்குகிறது. அந்தளவுக்கு எங்கள் இழப்புகளையும், வலிகளையும் இந்தப் பாடல் எங்களுக்கு நினைவூட்டி மீட்டுத் தந்து கொண்டே இருக்கிறது. இந்தவரிகளைக் கேட்கும் போது கண் கலங்காத பெற்றோர் ,சகோதர சகோதரிகள், தோழர்கள் இருக்கமாட்டார்கள்..! 

இந்த வலிமையான வரிகள் என் அண்ணா, என் மாமி , என் சித்தப்பா குடும்பம் முழுவதும், என் தோழி அகல்யா இன்னும் பலர் என்று நான் இழந்தவர்களும் , நான் அனுபவித்தவையையும் அவற்றின் பிரதிபலனாக எனக்கு கிடைத்த நோயும், வலியும் ....என்று வரிசையாக திரும்பவும் நோகடித்து நோகடித்து செல்லரித்து போன வாழ்கையை தான் முன்னால் எடுத்துவைக்கிறது. என்னுடைய துயரம் வெறும் தூசு தான் ஈழப் போரில் பறிகொடுத்த மற்றவர்களோடு ஒப்பிடும் போது...எனக்கே இப்படியென்றால் என்னைவிட அதிகமாக பறிகொடுத்தவர்களும் அனுபவித்தவர்களும் எப்படியெல்லாம் உழல்வார்கள்??
எங்களின் உணர்வும் , தமிழீழம் என்ற தாகமும் இன்னமும் வற்றாமல் வினாடிக்கு வினாடி எங்களிடம் எரிதணலாக வீறு கொள்ளக் காரணமே  இந்த வலியும், வேதனைகளும் தான். இந்த வலிகளின்  பின்னால் தமிழீழத்திற்காக நாங்கள் ஆகுதிகளாக கொடுத்த பிள்ளைகளும், அண்ணா, அக்கா, தம்பி தங்கச்சிமாரின் உயிர்களும் அவர்களுடைய போராட்டமும் அடங்கியிருப்பதால் தான் நாங்கள் தமிழீழம் என்ற அந்த ஒற்றைச் சொல்லை எங்கள் உயிரோடு பொருத்திக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் எங்களுக்கு இந்த ஒற்றைச் சொல் இன்னொரு மாற்று - அல்லது அளவற்ற வெகுமதியை விட அதியுன்னதமாயிருக்கிறது. தமிழீழம் என்ற தாகம் எனக்கு அடங்குமானால்  அது என் அண்ணாவை நானே கொன்றவளானதற்கு சமன், இந்திய அமைதிப்படையினரும் ஒட்டுக் குழுவினரும் சேர்ந்து சிதைத்த என் தோழி அகல்யாவின் சீரழிப்புக்கு நானே உடந்தையானவளாயிருப்பதற்கு சமன். .என் மாமியின் சாவு சரியானதே என்ற தீர்ப்புக்கு நானே கையெழுத்திட்டதற்கு சமன். குடும்பத்தோடு என் சித்தப்பா கொல்லப்பட்டதும் கூட விபத்து என்று பொய் சொன்னதற்கு சமன்.  அத்தனை பொய்களை நான் சொல்ல எந்த ஜென்மத்திலும் என்னால் முடியாது..!!

என்றைக்கும் இலங்கையில் இராணுவத்தின் அட்டூழியத்தில் ஒரு சராசரி ஈழத்தமிழன் தன் புலத்தின் வாழ்கையில் என்னவெல்லாம் இழப்பான், என்னவெல்லாம் அனுபவிப்பான் என்பதற்கு ஒரு சாட்சியாக இருப்பதையே நான் முக்கியமானதாக கருதுகிறேன். 
என்னைப் போல் என்னை விட இன்னமும் உக்கிரமாக உறுதியாக இருக்கும் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்..
அவர்களில் யாரோ ஒருவர் தான் அத்தனை அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் இன்றைக்கு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் அகல் ஏற்றிய ஆத்மா! தமிழீழத்தோடு தொடர்புடைய எந்த ஒரு செயலில் பங்குபற்றும் எவரும் ஒருவகையில் போராளிகள் தான். ஆயுதம் ஏந்தி களமாடமுடியாவிட்டாலும் நெஞ்சுரத்தோடு , சிங்கள அரசு மட்டுமல்ல உலக இராணுவமே வந்து அச்சுறுத்தினாலும் எங்கள் பிள்ளைகள், எங்கள் சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி மகத்தானது; முக்கியமானது என்பதை அந்த போராளி இன்றைக்கு உலகுக்கு உணர்த்தியுள்ளார். அவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியும், சிரம் தாழ்த்திய வணக்கத்தையும் தெரிவிக்கிறோம். எல்லாவிதமான அபாயங்களையும் கடந்து வந்து இழப்புகளின் துயரச் சுமையோடு நாங்கள் இன்றைக்கு ஏற்றும் அகல்கள் அத்தனைக்கும் நடுவில் அந்த மனிதர் அத்தனை அச்சுறுத்தல்களுக்குள்ளும் மத்தியில் உயிர் பயமில்லாமல் ஏற்றி வைத்த அந்த தீபம் மிகவும் தெளிவான , சுடராக பிரகாசிக்கிறது எங்கள் மனங்களில்....!! இது தான் ஈழத்தமிழன்! எங்கள் உணர்வுகளுக்கும் அடுத்த கட்ட வழித் தடத்துக்கும் எங்கள் தலைவன் நேரில் வந்து சந்திக்கு சந்தி மேடை போட்டு , மைக் செட் போட்டு பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. வேட்டி சேலை குடம் என்று பிச்சை போட வேண்டியதில்லை... சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்விலும் ஓடிக் கொண்டிருக்கும் வரை மாவீரர் நினைவாய் ஒவ்வொரு கார்த்திகை 27 அன்றும் நாங்கள் ஏற்றும் அகல் சுடர் எங்கள் இழப்புகளின் எரிதணல் அடையாளங்களாயிருக்கும்!!
 


தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே...!!  




No comments:

Post a Comment