Tuesday, October 8, 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.

அந்தப் படம் வந்த மூட்டம் முதல் ஸீன் பார்த்த போது ரொம்பவும் ஸ்லோவா இருக்கிற மாதிரி தெரிய அந்த விசிடி தட்டை தூக்கி எங்கோ மூலையில் எறிந்துவிட்டு போய்விட்டேன்.

நேற்று என்றைக்கும் இல்லாத திருநாளாக என் பிராணநாதர் உட்பட வீட்டில் அனைவரும் உட்கார்ந்து அதே படத்தை வாய் விட்டு சிரித்து சிரித்துக் கொண்டெ பார்த்து முடித்தோம் .

கனநாளைக்கு பிறகு அன்றைக்கு தான் வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து  படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது மனதுக்கு மிகவும் சந்தோசமாக  இருந்தது. படமும் அந்தமாதிரி ஒரு முஸ்பாத்தியான படம். ஒட்டு மொத்தமாக வீட்டிலிருந்த அனைவருமே சொல்லி வைத்தாற் போல் வாய் விட்டு சிரித்து பார்க்க தக்கதாக ஒரு படத்தை தந்ததற்கு அந்த திரைப்படத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.

அந்தப் படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.!! :)

கதாநாயகன் தான் விஜய சேதுபதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அசப்பில் எனது ஃபேஸ்புக் தம்பிமார்களில் ஒருவரான Yogoo Arunakiri யைப் போலவே எனக்கு தெரிந்தார்.  “என்னாச்சி...ஓ கிரிக்கெட் விளையாடினமா...நீ தானே அடிச்சே....?” என்று ஒவ்வொரு தடவையும் அவர் ஆரம்பிக்கும் போதெல்லாம் சம்மந்தமேயில்லாமல் தம்பி யோகா தான் நினைவில் வந்து கொண்டிருந்தார்.

அதுவும் திருமண reception ல் மணப்பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாகி “பா........”” என்று அலறியபடி திரும்பும் ஒவ்வொரு கட்டமும் நாங்கள் எல்லோரும் அவருடன் சேர்ந்து அதே மாதிரி “பா.....” என்று கலாட்டா செய்யுமளவுக்கு சூப்பராக இருந்தது. இன்று காலை குளித்து விட்டு தலை சீவிக் கொண்டிருக்கும் போது என் பிராணநாதர் என்னைப் பார்த்து “பா...” என்றாரே பார்க்கலாம். எனக்கு தெரியும் இனி கொஞ்ச நாளைக்கு நான் என்ன சட்டை போட்டாலும், எப்பிடி தலை இழுத்தாலும் இந்த “பா ....”சத்தம் கேட்க்கப் போவது நிச்சயமெண்டு....

தமிழில் நல்ல படம், இரசிக்கத் தக்க படம், வித்தியாசமான படம், தரமான படம், விரசமில்லாத படம் இனி வரவே வராது என்று ஒப்பாரி வைக்கும் திரைவிமர்சகர்கள் இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்லியிருந்தார்கள் என்று தெரியவில்லை...ஆனால் கன நாளைக்கு பிறகு ஆரம்பம் முதல் கடைசிக்கட்டம் வரை  நகராமல் இருந்து இரசிக்கத்தக்கதாக , தரமான, விரசமேயில்லாத, வித்தியாசமான , மனம் இலேசாகிப் போகுமளவுக்கு வாய் விட்டுச் சிரிக்க வைத்த நல்ல முஸ்பாத்தியான தமிழ் படம் பார்த்ததில் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.

சிவாஜி செத்துட்டாரா???

என்னாச்சி.........??? 

பிற்குறிப்பு:

இவ்ளோ நாள் கழிச்சு ஒரு படம் பாத்திட்டு எழுதியிருக்கிறேன்... எவராவது வந்து இங்கன விஜய சேதுபதி மாதிரி டயலாக்  எழுதினீங்கன்னு வையுங்களேன்.....சூன்யம் வைச்சுடுவேன் ஆம்மா,...ஜாக்கிரதை !!!

4 comments: