Monday, March 9, 2015

 நத்தைக்கூடுகள் சுமந்த காளிகள்... ! 




 ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 வருகிறது..!
போகிறது!! பெண்களுக்கான ஆர்ப்பரிப்புகளும், அவமானப்படுத்தலும். வாழ்த்துகளும் வசவுகளுமாக அந்த தினம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தாலும் தனிப்பட்ட வகையில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு உன்னதமான தேவதையாகவும், சக்கரவர்த்தினியாகவும் நினைத்து பூரிப்படைய நினைக்கும் நாளாக பார்க்கிறாள்..மார்ச் 8 என்பது மகளிர்தினம் என்ற தகவல் தெரிந்தவளாயிருந்தால்....!

ஆனால் அவளாலேயே உணரப்படாத விசயம் இந்த நாள் அவளுடைய சமூகத்தில் அவளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கப்பட வேண்டிய நாள் என்பதை!!

தீபாவளி பண்டிகை, நத்தார், காதலர் தினம் போல் இந்த நாளும் கொண்டாட்டத்துக்குரிய நாளாக கருதும் எவரும் ஒரு வினாடி நின்று நிதானித்து பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும்... மூளையின் செல்களை கசக்கி , நினைவுகளின் பக்கங்களை மேலே எடுத்து நடப்புகளின் வரிகளை கண் முன்னே கொண்டு வாருங்கள்.... அப்போது உங்கள் முன் விரியும் மிக அகண்ட கனன்ற நெருப்புக் குழிகளுக்குள்....உங்கள் சொந்தங்களில், உங்கள் நட்புகளில்...உங்கள் அயலில்...உங்கள் ஊரில்..உங்கள் நாட்டில்...உங்கள் அயல் நாட்டில்... உலகில்... எங்கெங்கெல்லாம் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும், கௌரவக் கொலைகளுமாய்...காட்சிகள்... 



எப்போதுமே இசைப்பிரியாவின் உயிரற்ற உடல் உலுக்கிவிட்ட உணர்வுகளை தேற்றமுடியுமா??

எப்போதுமே விபூசிக்காவின் கதறிய முகம் கண்ணைவிட்டு மறையுமா??

எப்போதுமே பதில் கிடைக்காத, கவனிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்  உலகின் மிக நீண்ட கால (16 ஆண்டுகளாக ) உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய பெண், யாருக்காக போராடினாரோ அதே மக்களாலேயே தேர்தலில் படுதோல்வியடைந்த  பெண் இரோம் ஷர்மிளாவையும் மறைக்க முடியுமா??

36 வருடங்களாக வன்புணர்வின் போது கொடூரமாக தாக்கப்பட்டு . காயப்பட்டு கோமாவில் கிடந்து மடிந்து போன  அருணா ஷண்பக், மேலும் கூட்டு வன்புணர்வுக்குட்பட்ட ஷக்தி மில், மற்றும் ஜோதி சிங் மட்டுமல்ல கல்பனா, உமா மகேஸ்வரி, வித்தியா , கிருசாந்தி உட்பட பல பாலகிகள் காலம் உள்ளவரை இந்த சமூகத்தின் மறைக்கவியலாத இரணங்களாக வடுக்களாகிப் போன அடையாளங்களாக இருக்கப் போகிறார்கள் என்ற வலிகளுடன் தான் ஒவ்வொரு மார்ச் 8ம் திகதியையும் முகமன் கூறுகிறோம் .

நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதற்காகவோ அல்லது எங்களை மற்றவர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காகவோ இந்த நாள் வரையறுக்கப்படவில்லை. இந்த நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான அடையாள நாள் அவ்வளவே!

சமைக்கத் தெரியாத அல்லது ஒரே உணவை தினமும் சமைத்து தரும் மனைவியை கொண்டவர்களும், தாய்க்கும் மனைவிக்குமிடையில் மாட்டிக் கொண்டு முழி பிதுங்குபவர்களும்,காதலில் ஏமாற்றப்பட்டவர்களும் அல்லது வெறுமனே பெண்களை கிண்டல் பண்ணுவதில் சந்தோஷிக்கும் ஆண்களுக்கும் இந்த நாள் கேலிக்குரியவொன்று தான். பெண்களின் தகுதி தெரியாதவர்கள் எவருக்குமே இது கேலிக்குரிய தினம் தான்,

 ஒவ்வொரு இசைப்பிரியாவும், விபூஷிக்காவும், கிருசாந்தியும், ஜோதி சிங்கும் , ஷக்தி மில்லும், அருணா ஷண்பக்கும், இரோம் ஷர்மிளாவும் போல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மனைவி, அம்மா , மகள், சகோதரி என்ற பெயரில் வெறும் சமையல்காரியாக, சலவைக்காரியாக, பிள்ளை பெறும் இயந்திரங்களாக , உழைத்துக் கொட்டும் ஏ.டி.எம் மெஷின்களான பெண்களும் இந்த   மார்ச் 8ம் திகதியை அடையாளப்படுத்துபவர்கள் ...!

இது யாதுமாகி அனைத்துமாகிய காளி நீ என்று போற்றப்பட்டுக் கொண்டே புரட்டி எடுக்கப்படும் சமூகத்தின் ஒரு பிரிவின் தேவையை உணர்த்தி அதற்கெதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாள நாள் மட்டுமே!!

ஐநா கணக்கெடுப்பு அது இது என்று ஆதாரங்கள் திரட்டி, கௌரவக் கொலைகள் முதல், வன்புணர்வு வரை சமூக ரீதியாகவும், அரசியல், இன, மத வெறி மூலமாகவும், குடும்ப ரீதியாகவும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைப் பற்றி எழுதுவதும் பாடுவதுமாய்...........பொதுக் கூட்டங்களுக்கு போவது, பெண்களுக்கான போராட்டங்களில் பதாகை தூக்குவது, குரல் கொடுப்பது, நிதி கொடுப்பது, நின்று , நடந்து ஆதரவு கொடுப்பது ............எல்லாம் தொடர்கிறது....இன்றைக்கு நாங்கள் விதைகளாக விதைத்தால் அது என்றைக்காவது முளைத்து வேர், கிளை படர உறுதியாகுமென்ற அற்ப நம்பிக்கையில்... ஒவ்வொரு அங்குலமாக பயணம் ஊருகிறது..!! ஊர்ந்து கொண்டிருக்கும் அந்த நத்தைகளில் ஒரு நத்தையாக தலைகுனிந்து ஊர்ந்து கொண்டிருக்கிறேனே தவிர என்னால் வேறு என்ன செய்ய முடிகிறது??

இந்த போராட்டங்களில் உறுதி எடுக்கப்பட்ட கணத்தின் உடல் வலிமையும், சூழ் நிலையின் சுதந்திர விரிவும் படிப்படியாக குறைந்து போய்க் கொண்டே இருக்கிறது...அடுத்த வருடம், அதற்கடுத்த வருடம்...இதோ இந்த வருடமும் வந்துவிட்டது... வருடா வருடம் வெவ்வேறு விதமான சுமைகளும், நோய்களும்,இடர்களும்,தடைகளும் நத்தையின் முதுகு கூட்டை பெரிதாக்கி பயணத்தை மட்டுப்படுத்திக் கொண்டே போகிறது...ஒரு புள்ளியில் நிலைகுலைந்து நத்தை வீழ்ந்துவிடும் போதில்....அதன் கனவும் இலட்சியமும் கூட சமாதியாகப் போய்விடும்.

ம்ம்ஹூம்....எந்த மாற்றத்தையும் சாதிக்க முடியவில்லை; எந்த விபத்தையும் ,எந்த கொடுமையையும் நிறுத்த இயலவில்லை.. எந்த பெண்ணையும் காப்பாற்ற முடியவில்லை... உதவ முடியவில்லை... எந்தப் பெண்ணுக்காகவும் கொடுத்த குரல் வெளியில் கேட்கப்படாமலேயே அமுங்கிப் போய்விட்டது...அல்லது செவிமடுக்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.. என்பதை வேதனையுடன் நீ என்ன செய்து கிழித்தாய் என்ற பாரிய வினாவின் முன் தலைகுனிந்து பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது .

நத்தைகளுக்கு மத்தியில் விசம் கக்கும் நச்சுப் பாம்புகளுக்கும் தெரியாமல் இடம் கொடுத்துவிட்டோமல்லவா ?? பாம்புகளை நம்பி பின்னால் ஊரும் நத்தைகளும் ஒரு முனைப்பில் பாம்புகளாக மாறும் என்ற எச்சரிக்கையுடன் இனியாவது இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மட்டும் கற்றுக் பெண்கள் கொள்ள வேண்டும் !! இந்த நத்தையால் எதையும் மாற்றி அமைக்க முடியவில்லை !!
இந்த நாளுக்கான வாழ்த்து சொல்லவும் வாழ்த்தைப் பெறவும் தகுதியில்லாத குற்ற உணர்வு உள்ளிருந்து அழுத்துகிறது.

No comments:

Post a Comment