Wednesday, February 19, 2014

விடுதலை தந்த விலையில்லாத சந்தோசம்..!!

எத்தனையோ நாள் அற்புதம் அம்மாளின் படங்களை இணையத்தில் பார்க்கும் தருணங்களை குற்றவுணர்வுடன் தவிர்க முயன்றிருக்கிறேன். அவருடைய வாழ்கையின் இடரான துயரான தருணங்களில் எந்தவிதத்திலும் பங்கெடுக்க முடியாத கையாலாகாத நிலையில் இருக்கும் உணர்வின் விளைவு அது. மூவர் விடுதலை என்ற தலைப்பில் என் அஞ்சல் பெட்டிகளை நிறைத்த அத்தனை பெட்டிஷன்களையும் சலிக்காது நிரப்பி நிரப்பி ஒரு குற்ற உணர்விலிருந்து தப்பிக்க முனைந்த அந்த மனதைப் பிசைந்த கணங்கள் இனி வராது. மூவர் பற்றிய செய்திகளின் தலைப்புகளை படிக்கும் முன்பே மூளையையும், மனதையும் கௌவிப் பிடிக்கும் ஒரு திகிலான உணர்வை வெறுத்த அந்த தருணங்கள் இனி இல்லை. ஆனால் இதற்கெல்லாம் விலையாக தன்னை ஆகுதியாக்கிய ஒரு உன்னதமான ஆத்மா இல்லையே என்ற  ஏக்கம் என்றைக்கும் எல்லாத் தமிழர்களிடமும் மிஞ்சி இருப்பது போலவே என்னிடமும் இருக்கும்.  


அம்மா அற்புதம்மாள் என்ற தாயின்  முகத்தில் பொங்கும் உணர்ச்சிக் குவியலை  இன்று அவ்வளவு கண்ணீருக்குமிடையில் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஆசை தீர பார்த்துக் கொண்டே இருக்கிறேன். 

தூக்குத் தண்டணை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டணை என்ற அறிவிப்பைக் கேள்விப்பட்ட அந்த நிமிடம் கிடைத்த நிம்மதிப் பெருமூச்சின் விலை மதிப்பிட முடியாது, அரசியல் இலாபம் கருதியோ எந்த நோக்கமோ எதுவோ...அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை... மூவரையும் உடனடியாக விடுதலை செய்வது என்ற முதலமைச்சரின் அறிவிப்பு தான் 2009 மே 17க்குப் பின் துயர இருளில் மூழ்கிக் கிடந்த தமிழ் இனத்துக்கு  கிடைத்த நல்ல செய்தி . இரட்டிப்பு நிம்மதியுடன் இன்றைக்கு மூன்று குடும்பங்கள் தூக்கம் வராமல் சந்தோசத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருப்பார்களா அல்லது பல வருடங்களின் பின் கண்ணீர் மறந்து தூங்குவார்களா என்ற சந்தோசமான ஊகிப்பிலேயே நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது.

ஒரு குரூரமான உணர்வாக இருப்பினும் இந்த விடுதலை எத்தனை பேரின் முகத்தில் எறியப்பட்ட சேறாக இருக்கும் என்று யோசித்து மனதுக்குள் புன்னகைக்க கிடைத்த சந்தோசமான சந்தர்ப்பத்தை எதுக்காகவும் இழக்க நான் விரும்பவில்லை. நீதி தேவதை கண்ணைக் கட்டிக் கொண்டிருப்பதை தான் இத்தனை நாள் பார்த்திருக்கிறேன், ஆனால் இன்றைக்கு தான் நீதி தேவதையின் கண் திறக்கப்பட்டிருக்கிறது சதாசிவம் ஐயா வழியாக.

இந்த அழகான தருணத்தின் உணர்வை பைத்தியக்காரி போல் பகிர்வதை விட   $600.000 .00 இலாபத்துக்கான முதலீட்டின் கணக்கு வழக்கு பார்க்க வேண்டிய நேரம் அப்படியொன்றும் பெரிதாக தெரியவில்லை. .... !!  10 வருடங்களாக காத்திருந்து கிடைத்திருக்கும் ஒரே நேரத்தில் மூன்று ரியல் எஸ்டேட் முதலீட்டு காண்ட்ராக்ட். அதற்காக ஒரு மாதகாலமாவது இணையத்தை பிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்றால் என்னால் இந்த சந்தோசத்தின் பின்னால் முடியவில்லை. உன்னை திருத்தவே முடியாது என்பது போல் என் கணவர் என் பின்னாலிருந்து சிரித்துக் கொண்டே தலையை உலுப்புகிறார்...ஆனால் அவரால் கூட இன்று முழுவதும் நம்ப முடியாத உணர்ச்சிக் குவியலில் தான் இருக்கிறார். எனக்கு என் உணர்வை வெளிப்படுத்த எழுத தெரிகிறது. ஆனால்...பாவம் அவருக்கு அந்த கொடுப்பினையைக் கடவுள் கொடுக்கவில்லை...!! :)
இன்று நான் மிக மிக சந்தோசமாக இருக்கிறேன்.

Tuesday, February 11, 2014

ஒப்புக்கு சொல்லப் படும் உப்பு சப்பில்லாத தத்துவங்கள்


 ஒப்புக்கு சொல்லப் படும் உப்பு சப்பில்லாத தத்துவங்கள்


இது வரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடப்பது என்பதை யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்!

இப்படி ஒரு தத்துவத்தை ஒரு நண்பரின் பதிவின் பின்னூட்டத்தில் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மிக சுலபமாக தத்துவங்கள் எழுதப்படுகின்றன. ஆனால் அவற்றை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு வாழத் தலைப்படுபவர்களுக்கு தான் தெரியும் அவை வெறும் ஜிகினா பூசப்பட்ட வார்த்தைகள் என்று.

நடந்தவற்றை யோசிப்பதை விட்டுவிட்டு நடக்கப் போவதை சிந்திக்க சொன்னால் எதையென்று சிந்திக்க முடியும்?? குடும்பமே நிர்மூலமாக்கப்பட்ட சிறுவனிடம் போய் இதை சொல்லிப் பாருங்கள்! இராணுவத்தினரால் வன்கொடுமை செய்யப்பட்டு , குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும் ஒரு பெண்ணிடம் போய் சொல்லிப் பாருங்கள்! உயிரோடு கருகிய சொந்தங்களின் பிணக்குவியலில் உட்கார்ந்திருக்கும் ஒரு அனாதை அகதியிடம் போய் சொல்லிப் பாருங்கள்..!!

ஒவ்வொருவருவம் அடுத்து வரும் நாட்களை கடத்தப் போகிறார்கள் தான். அதற்காக சுவாசிக்கப் போகிறார்கள் தான். சுவாசிப்புக்காக சாப்பிடப் போகிறார்கள் தான். சாப்பாட்டுக்காக உழைக்கவோ அல்லது அகதிப் பிச்சையோ வாங்கப் போகிறார்கள் தான். ஆனால் அந்த நாட்கடத்தல்களில் என்ன விடிவு வரப் போகிறதென்றோ அல்லது நான் என்ன சாதிக்கப் போகிறேன் என்றோ எதிர்பார்ப்போ, திட்டமிடலோ எதுவும் இருக்கப் போவதில்லை. சூனியமாக்கப்பட்ட ஒரு வரலாற்றின் அடையாளங்களாக இருக்கும் வரை இருந்துவிட்டுப் போகப் போகிறோம். எங்களிடம் வந்து தத்துவப் பதாகைகளை காட்டாதீர்கள்!!

Saturday, January 4, 2014

100 சிறந்த கதைகளின் கதை...


பண்புடன் என்றொரு குழுமம். எழுத்துச் சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே  இலக்காக வைத்து தொடக்கப்பட்ட கூகிளின்  தமிழ் குழுமம்.  ஊருப்பட்ட உறுப்பினர்கள்..பலவிதமான கருத்து மோதல்கள்..விதம் விதமான சமூகப் பார்வைகள். அங்கே விவாதிக்கப்படாத அலசப்படாத விசயங்கள் தேடிப் பார்க்க வேண்டும்.. அப்படியொரு குழுமத்தில் நானும் ஒரு உறுப்பினர்.

ஒருவர்  நாலாண்டுக்கும் மேலாக ஒரு இழையை “  100 சிறந்த கதைகள்” என்ற தலைப்பில் உருவாக்கி ஒவ்வொரு  சிறுகதைகளாக தேடி தேடி எடுத்து , உட்கார்ந்து , தட்டச்சி பண்புடன் குழுமத்தில் பிரசுரித்து வந்து கொண்டிருந்தார். இழை ஆரம்பிக்கப்பட்ட திகதி மார்ச் 14 , 2010.

நானும் அப்பப்ப வாசித்து விட்டு ம்ம்ம்..நல்ல கதை தான் என்று சிலதையும், விசர்க் கதை என்று சிலதையும் மனதுக்குள் ஒப்பீடு செய்துவிட்டு போய்விடுவேன்... இன்றளவில் அந்த இழையின் உழைப்புக்குரியவருக்கு  நல்லா இருக்கு என்று ஒரு பின்னூட்டம்  போட்டதாக நினைவில்லை.ஆனால் அந்த கதைகளை வாசிக்க கிடைத்த சந்தர்ப்பங்கள் பலவும் மிகப் பெறுமதியான நிமிசங்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.

நானே சில நேரங்களில் நினைத்திருக்கிறேன் ஏன் இவர் இப்படி கஷ்டப்பட்டு , நேரம் மினக்கெட்டு ஒவ்வொரு கதையாக தட்டச்சி இழையிலிட்டுக் கொண்டிருக்கிறார் என்று. ஏன் என்றால் ஒரு சின்ன பதிவு எழுதி முடிக்கவே  எத்தனை சோம்பல் முறிப்பும், இழுபறியுமாய் நாள் கணக்கில் இழுத்தடித்து நாலு வரி தட்டுகிறோம் நாம்.. ஆனால் இவர் நாலு வருடமாக ஒவ்வொரு கதையாக தட்டச்சி அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய அந்த குறிப்பிட்ட இழைக்கு போய் பார்த்தால்  தெரியும் ஒவ்வொரு கதையும் எத்தகையது என்று. இழையில் கதைகளை வாசிக்கும் போது இந்தக் கதைகளை எங்கிருந்து எடுத்துப் போடுகிறார் என்ற புரிதல் இல்லாமல் அவர் வைத்திருக்கும் கதை புத்தகங்களிலிருந்து  பார்த்து பார்த்து டைப் பண்ணி அனுப்புகிறாராக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒவ்வொரு கதையையும் பதிவேற்றும் முன் அந்த கதைகளை எப்படியெல்லாம் தேடி எடுத்திருக்கிறார் என்று இன்று தான்  புரிந்து கொண்டேன்.

 இன்று காலை ஆசிப் அண்ணா தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவல் போட்டிருந்தார்.  வாசித்த போது மனது மிகவும் வலித்தது. அந்த குறிப்பிட்ட இழையை உருவாக்கி  நாலு வருடங்களாக மெருகேற்றி வரும் சென்ஷி என்ற சகோதரர் ஒரு சில கதைகளை தேடி எடுக்க பட்ட கஷ்டங்களை ஆசிப் அண்ணா விவரித்திருந்தார்...

Asif Meeran 
14 மணி நேரம் முன்பு கைபேசிஇலிருந்து பதிவேற்றப்பட்டது
ஒரு சிறுகதை - இலங்கை எழுத்தாளர் எழுதியது.. அதன் பிரதி எங்கும் கிடைக்க வாய்ப்பேயில்லை என்ற நிலையில் விஜய் மகேந்திரனிடம் அந்தப் பிரதி இருப்பதை அறிந்து அந்த ஒரே சிறுகதைக்காக ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அதனை வாங்கினான் +me senshe. நான் கூட அவனைத் திட்டினேன். "இவ்வளவு கிறுக்குத்தனம் பிடித்து இதனைத் தொகுத்து என்ன செய்யப் போகிறாய்? " என்று. ஆனால் இலக்கியத்தின் மீதிருந்த தீவிர ஆர்வமும் தேடித் தேடி வாசிப்பதில் இருக்கும் ஆனந்தமும் அடைய முடியாதையும் அடைந்தே தீர வேண்டுமென்ற தீராத வேட்கையும், இரவு பகல் பாராமல் தட்டச்சு செய்து கொட்டிய உடல் உழைப்பும், அதற்குப் பின்ன்னல் இருந்த பொருள் செலவுகளுமாக நான்கரை வருடங்களாகத் தவம் போல கடும்பாடுபட்டு ஒருவன் சிறுகதைகளைத் தேடித் தேடி தொகுப்பான். வலிக்காமல் வியாபாரம் செய்வார்கள் இலக்கிய வியாபாரிகள்.. எஸ். ரா தன் முன்னுரையில் நன்றி சொல்லி விட்டாராம்.. அடடே!! அவருக்குத்தான் எத்தனை பெரிய மனது?? இங்கே இலக்கியம் செய்கிறோம் என்று சொல்லிக் கொள்ள எந்த மயிரானுக்கும் அருகதையில்லை.. காசு.பணம்..துட்டு..மணி மணிதான்.. இந்த நான்கரை வருட உழைப்பிற்கான அங்கீகாரம் தராதவர்களைக் காலம் மன்னிக்காது.

********************************************* 


Asif Meeran நன்றிDyno Buoy .. கைக்குழந்தையாக ஆஹில் இருக்கும்போது அவனை அம்மாட்ட விட்டிட்டு சென்ஷி கேட்ட புத்தகம் வாங்க விஜயா பதிப்பகம் போயிருக்காங்க சென்ஷியின் மனைவி..ஒவ்வொரு கதைக்காக 3, 4 புக் வாங்கி செல்போன்ல போட்டோ எடுத்து மெயில் செஞ்சிருக்காங்க. அதை தட்டச்சு செஞ்சு இலக்கிய சேவை செஞ்சிருக்கான் நம்ம சென்ஷி...ஆனால்..... தொகுப்பாசிரியர் யாரு??? என்ன கொடுமை சார்??;-(

************************************************

எறும்புகள் தங்கள் உணவை எப்படி சிறுகச் சிறுகச் சேமிக்குமோ , தேனீக்கள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தேன்கூட்டில் தேன் சேர்க்குமோ அது போலத் தான் பண்புடன் குழுமத்தில் அந்த இழையில்  சென்ஷி எடுத்த முயற்சி. உழைப்பு, தொகுப்பு...எல்லாம்..!!

அந்தக் கதைகள் எதுவும் சென்ஷியால் எழுதப்பட்டவை அல்ல. ஆனால் அதை தொகுக்க அவர் உழைத்த உழைப்பை - நாலு வருடமாக அந்த மனிதர் இழைத்து இழைத்து பதிவேற்றிய ஒரு தொகுப்பை இன்னொருவர் தன் தொகுப்பாக புத்தகம் வெளியிட்டு அது வரப்போகும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்கும் வரப் போகிறதாம்..

இதை எந்த வகையில் எடுத்துக் கொள்ளலாம்??
 நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே...!!

சில நாட்களாக இணையத்தில் இலக்கிய வியாபாரிகளின் நரித்தனங்கள் பற்றியும், சில்லறைக் குணங்களைப் பற்றியு படித்து வருகிறோம். . இன்று இன்னொரு இலக்கிய வியாபாரியை அடையாளம் கண்டிருக்கிறோம்.

நன்றி : http://abedheen.wordpress.com/2014/01/04/sram100/    இந்த சுட்டியில் மேலும் விபரங்கள் அறியலாம். படிக்கலாம்.

Wednesday, November 27, 2013

தாயகக் கனவுடன்.....


இந்தப் பாடலை ஏதோ ஒரு காரணத்தில் மற்ற நாட்களில் வாய் முணு முணுத்து விட்டால் எப்படியும் கனநாளைக்கு அந்தப் பாடல் தான் மூளைக்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் இசைத்துக் கொண்டிருக்கும்...!
உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள், உறவினர் வந்துள்ளோம்.

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே எங்கே, ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே, ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் 


என்ற வரிகள் கண்ணீரைத் தாண்டி என்றைக்குமே போனதில்லை....! வாய் முணு முணுக்கும் பாடல் அங்கேயே உறைந்து உடைந்து விடுகிறது...கண்ணீர் தானகவே உருளத் தொடங்குகிறது. அந்தளவுக்கு எங்கள் இழப்புகளையும், வலிகளையும் இந்தப் பாடல் எங்களுக்கு நினைவூட்டி மீட்டுத் தந்து கொண்டே இருக்கிறது. இந்தவரிகளைக் கேட்கும் போது கண் கலங்காத பெற்றோர் ,சகோதர சகோதரிகள், தோழர்கள் இருக்கமாட்டார்கள்..! 

இந்த வலிமையான வரிகள் என் அண்ணா, என் மாமி , என் சித்தப்பா குடும்பம் முழுவதும், என் தோழி அகல்யா இன்னும் பலர் என்று நான் இழந்தவர்களும் , நான் அனுபவித்தவையையும் அவற்றின் பிரதிபலனாக எனக்கு கிடைத்த நோயும், வலியும் ....என்று வரிசையாக திரும்பவும் நோகடித்து நோகடித்து செல்லரித்து போன வாழ்கையை தான் முன்னால் எடுத்துவைக்கிறது. என்னுடைய துயரம் வெறும் தூசு தான் ஈழப் போரில் பறிகொடுத்த மற்றவர்களோடு ஒப்பிடும் போது...எனக்கே இப்படியென்றால் என்னைவிட அதிகமாக பறிகொடுத்தவர்களும் அனுபவித்தவர்களும் எப்படியெல்லாம் உழல்வார்கள்??
எங்களின் உணர்வும் , தமிழீழம் என்ற தாகமும் இன்னமும் வற்றாமல் வினாடிக்கு வினாடி எங்களிடம் எரிதணலாக வீறு கொள்ளக் காரணமே  இந்த வலியும், வேதனைகளும் தான். இந்த வலிகளின்  பின்னால் தமிழீழத்திற்காக நாங்கள் ஆகுதிகளாக கொடுத்த பிள்ளைகளும், அண்ணா, அக்கா, தம்பி தங்கச்சிமாரின் உயிர்களும் அவர்களுடைய போராட்டமும் அடங்கியிருப்பதால் தான் நாங்கள் தமிழீழம் என்ற அந்த ஒற்றைச் சொல்லை எங்கள் உயிரோடு பொருத்திக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் எங்களுக்கு இந்த ஒற்றைச் சொல் இன்னொரு மாற்று - அல்லது அளவற்ற வெகுமதியை விட அதியுன்னதமாயிருக்கிறது. தமிழீழம் என்ற தாகம் எனக்கு அடங்குமானால்  அது என் அண்ணாவை நானே கொன்றவளானதற்கு சமன், இந்திய அமைதிப்படையினரும் ஒட்டுக் குழுவினரும் சேர்ந்து சிதைத்த என் தோழி அகல்யாவின் சீரழிப்புக்கு நானே உடந்தையானவளாயிருப்பதற்கு சமன். .என் மாமியின் சாவு சரியானதே என்ற தீர்ப்புக்கு நானே கையெழுத்திட்டதற்கு சமன். குடும்பத்தோடு என் சித்தப்பா கொல்லப்பட்டதும் கூட விபத்து என்று பொய் சொன்னதற்கு சமன்.  அத்தனை பொய்களை நான் சொல்ல எந்த ஜென்மத்திலும் என்னால் முடியாது..!!

என்றைக்கும் இலங்கையில் இராணுவத்தின் அட்டூழியத்தில் ஒரு சராசரி ஈழத்தமிழன் தன் புலத்தின் வாழ்கையில் என்னவெல்லாம் இழப்பான், என்னவெல்லாம் அனுபவிப்பான் என்பதற்கு ஒரு சாட்சியாக இருப்பதையே நான் முக்கியமானதாக கருதுகிறேன். 
என்னைப் போல் என்னை விட இன்னமும் உக்கிரமாக உறுதியாக இருக்கும் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்..
அவர்களில் யாரோ ஒருவர் தான் அத்தனை அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் இன்றைக்கு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் அகல் ஏற்றிய ஆத்மா! தமிழீழத்தோடு தொடர்புடைய எந்த ஒரு செயலில் பங்குபற்றும் எவரும் ஒருவகையில் போராளிகள் தான். ஆயுதம் ஏந்தி களமாடமுடியாவிட்டாலும் நெஞ்சுரத்தோடு , சிங்கள அரசு மட்டுமல்ல உலக இராணுவமே வந்து அச்சுறுத்தினாலும் எங்கள் பிள்ளைகள், எங்கள் சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி மகத்தானது; முக்கியமானது என்பதை அந்த போராளி இன்றைக்கு உலகுக்கு உணர்த்தியுள்ளார். அவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியும், சிரம் தாழ்த்திய வணக்கத்தையும் தெரிவிக்கிறோம். எல்லாவிதமான அபாயங்களையும் கடந்து வந்து இழப்புகளின் துயரச் சுமையோடு நாங்கள் இன்றைக்கு ஏற்றும் அகல்கள் அத்தனைக்கும் நடுவில் அந்த மனிதர் அத்தனை அச்சுறுத்தல்களுக்குள்ளும் மத்தியில் உயிர் பயமில்லாமல் ஏற்றி வைத்த அந்த தீபம் மிகவும் தெளிவான , சுடராக பிரகாசிக்கிறது எங்கள் மனங்களில்....!! இது தான் ஈழத்தமிழன்! எங்கள் உணர்வுகளுக்கும் அடுத்த கட்ட வழித் தடத்துக்கும் எங்கள் தலைவன் நேரில் வந்து சந்திக்கு சந்தி மேடை போட்டு , மைக் செட் போட்டு பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. வேட்டி சேலை குடம் என்று பிச்சை போட வேண்டியதில்லை... சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்விலும் ஓடிக் கொண்டிருக்கும் வரை மாவீரர் நினைவாய் ஒவ்வொரு கார்த்திகை 27 அன்றும் நாங்கள் ஏற்றும் அகல் சுடர் எங்கள் இழப்புகளின் எரிதணல் அடையாளங்களாயிருக்கும்!!
 


தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே...!!  




Wednesday, November 13, 2013

தமிழக அரசியல்வாதிகளும்...நாங்களும்...!! பகுதி 1


தமிழக அரசியல்வாதிகளை என்றைக்கும் நம்பக் கூடாது என்று நான் எழுதினால் அரசியல் அறிவில்லாதவள், காழ்புணர்ச்சியுடையவள், இராசபக்சேயைக் கூட இந்தளவுக்கு விமர்சிக்காதவள் என்றெல்லாம் என்னை தூற்றியவர்கள் உண்டு. அவர்களை நான் என்றைக்கும் வெறுத்ததில்லை. ஏன் என்றால் அவர்கள் என்னை தூற்றும் போது கூட அக்கா என்று அழைத்து தான் விமர்சிப்பார்கள். என்னுடைய கருத்துகளையும் கடந்து நானும் அவர்களை சகோதரர்களாகவே பார்க்கிறேன். ஏனென்றால் நம் இரு பிரிவினரும் சாதாரண மக்கள்.

ஆனால் எங்கள் இருவருக்குமே வித்தை காட்டும் இன்னொரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்களை அரசியல்வாதிகள் என்று சொல்கிறோம். அவரவர் தங்களுக்கு பிடித்த அரசியல்வாதிகளுக்காக என்னுடன் வாதாடுகிறார்கள். தான் நம்பிய தலைவரை அக்காவிடம் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதும், அந்த தலைவரை இன்னொருவர் காட்டமாக விமர்சிப்பது தான் நம்பிய கொள்கையையும் பின்தொடர்தலையும் கூட அவமதிப்பதாக கருதுகிறார்கள் அந்தச் சகோதரர்கள். அவர்கள் தங்கள் தலைவரின் எந்த செயலை இன்னொருவர் விமர்சித்தாலும் நாகரீகமானவர் எனில் சில பல எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள் என்ற பெயரில் பதிலளிப்பார்கள். சபை நாகரீகத்தைப் பற்றி அக்கறையற்றவர்களாயின் தூஷணைகளால் அர்சிப்பார்கள். அவ்வளவு தான். அதற்கு பயந்து நான் என்னுடைய கருத்துகளைச் சொல்லாமல் இருக்க முடியுமா??

அரசியலில் ஒரு துண்டு சால்வையை வைத்து எத்தனை தடவை கட்சிக்கலர் கரையை மாற்றி மாற்றி வித்தை காட்டும் இந்த அற்பத்தனமான அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் கடைசி வரை தன் நிலையிலிருந்து மாறாத எதிரிகளுடன் இணக்கமாக போக எத்தனையோ வழிகள் , சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அடிபணியாமல் , மக்களோடு மக்களாக போராளிகளோடு களத்தில் போராளியாக தன் குடும்பம் முழுவதையும் பலிகொடுத்த எங்கள் தலைவரை நாங்கள் எப்படி எல்லாம் பூசிப்போம்? ! எங்கள் மனநிலையில் ஒரு வினாடியாவது நீங்கள் இருந்து பார்க்க வேண்டும்...!

 ஒவ்வொரு தடவையும் உங்கள் அரசியல்தலைவர்கள் ஈழம் , ஈழத்தமிழர், முள்ளிவாய்க்கால், பிரபாகரன்,இசைப்பிரியா என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் போதெல்லாம் நீங்கள் இந்தியாவிற்குள் இருக்கும் தமிழக அரசியல்கட்சிகளுக்கு வாக்களிக்கும் மக்களாக - ஈழத்தமிழருக்காக பரிதவிக்கும் தொப்புள் கொடிகளாக இருக்காமல்,  போரில் உறவுகளைப் பறிகொடுத்த நாங்களாக இருங்கள்....! இவர்கள் சொல்லும் அத்தனை சமாதானக்களில், சப்பைக்கட்டுகளில் எதையாவது உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று எனக்கு சொல்லவேண்டாம். உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்...போதும்!!

இத்தனையும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் கீழே நீங்கள் மதிக்கும் அரசியல்வாதிகளிடம் தான் சில கேள்விகளை கேட்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது. அவற்றை நான் கேட்டால்
ஒரு சாரா(கோதர)ர் நாங்கள் தான் இந்த திடலை கட்டினோம் என்பீர்கள். இன்னொரு சாரா(கோதர)ர் எங்கள் தலைவர் தான் திடல் கட்ட இடம் கொடுத்தார் என்பீர்கள். மற்றொரு சாரா(கோதர)ர் எங்கள் ஐயா தான் திறந்து வைத்தார் என்பீர்கள்.  இடித்தவர்களும் வேறொரு சாரா(கோதர)ர் மதிக்கும் தலைமை தான்...!! இவர்களை ஆதரித்தால் தான் காங்கிரசையும் திமுகவையும் விரட்டலாம் என்ற அரசியல் சாணக்கியம் பேசிய தலைவர்கள் வேறு எங்கிருந்தும் வரவில்லை...! (இனி இவர்களை விரட்ட திரும்ப யாரை வரவழைப்பீர்களோ?)

எம் சகோதரர்களே...நீங்கள் மதிக்கும் அரசியல்வாதிகளிடம் தான் கேட்கிறோம்.....

எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்து எங்களை சிங்களவன் இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்தான்....அவன் எதிரி!

நீங்கள் ஒரு சாரார் எங்கள் மக்களுக்காக நினைவுத்திடல் கட்டினீர்கள்...திறப்புவிழா நடத்தினீர்கள்...மிக்க நன்றி...!!


இப்போது ஏதோ நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக காரணம் காட்டி சுற்றுச் சுவரை இடித்தும் விட்டீர்கள் இன்னொரு சாரார்.... சிங்களவனை விட வேக வேகமாக..!!

இப்போது உங்களை நாங்கள் இனி எந்த பட்டியலில் சேர்ப்பது??

உணர்வும், பறிகொடுத்த வலியும் அனுபவிக்கும் எமக்கு எங்கள் மாவீரர்கள் இரண்டாம் ஆண்டவர்கள். அவர்களுக்கான துயிலும் இல்லங்கள் எங்களுக்கு கோவிலைப் போன்றவை. முள்ளிவாய்கால் என்ற வார்த்தை எங்கள் வரலாற்றில் உயிரோடு பதைக்க பதைக்க எங்கள் இனம் கொடூரமாக அழிக்கப்பட்ட (holocaust) அடையாளம். ஈழத்தில் அமைக்கமுடியாத ஒரு விசயத்தை , இன்னலுறும் ஈழத்தமிழரின் ஒரு அடையாளமாக , வரலாறு சொல்லும் சாட்சியாக இந்த திடல் இங்கிருக்கட்டும் என்ற நோக்கம் தமிழக மக்களிடம் இருந்தது.

மக்களின் பார்வைக்கு எதிர்மாறாகத் தான் அரசியல்வாதிகளின் கணிப்பு இருக்கும் என்பது எமக்கு தெரியும். இனி இந்த முள்ளிவாய்க்கால் திடல் அரசியல்வாதிகளிடம் சிக்கி எப்படியெல்லாம் சீரழியப் போகுதோ என்ற கேள்வி ஈழத்தமிழர்களிடம் இருந்தது. அதனாலேயே ஈழத்தமிழர் பலர் இந்த திடல் பற்றி கருத்து வெளியிட விரும்பவில்லை.  ஆனால் பலர் வெளிப்படையாகவே எதிர்ப்பை தெரிவித்தனர்..!

நாங்கள் எதிர்பார்த்தபடி தான் தம்பிங்களா உங்கள்  அரசியல்வாதிகளின் நோக்கங்கள்.  இந்த திடலை வைத்து இனி எப்படி ஒவ்வொருவரும் அரசியல் காய்களை நகர்த்தலாம் என்று தான் திட்டமிடல் இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்கப் போவதில்லை.எங்கள் எதிர்பார்ப்பு சரியாக இருந்தது. ஆனால் இந்தளவு அவசர அவசரமாக மூன்று நாட்களுக்குள்  போட்டியைத் தொடங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை...தான்!! 

ஈழத்தமிழர்களாகிய எங்களுக்காக தமிழுணர்வாளர்கள் போராடினார்கள்; தங்கள் உயிரை துச்சமாக மதித்து தியாகம் செய்தார்கள்; தீக்குளித்தார்கள். அவர்களின் கனவும் ஈழத்தமிழருக்கானதாகவே இருந்தது. இவர்கள் முன் இந்த அரசியல்வாதிகள் எல்லாரும் அற்பமானவர்கள். இந்த தெளிவு எங்களிடம் இருக்கிறது. 

ஆக இந்த அரசியல்வாதிகளுக்கிடையில் நைந்து  நையப்புடைந்து வெறுத்துப் போக போவது என்னவோ மக்களாகிய நீங்களும் நாங்களும்...பாவம் நெடுமாறன் ஐயாவையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்....இந்த மனுசர் தன் கட்சிக்காகவோ , தன் குடும்பத்துக்காகவோ,தனக்காகவோ  என்றில்லாமல் ப்பாவம் ஈழத்தமிழருக்காக தெருதெருவாக நின்று போராடி சீரழிகிறார்...!  :(

ஆனால் ஒன்று.......
இனி எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் “இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு திடல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு செப்பனிட்டு தருவோம்” என்று ஒரு வாக்கியத்தை அறிகையாக வைக்கலாம். - ஆக அரசியல்வாதிகளுக்கு இலாபம் தான் எப்படிப் பார்த்தாலும் ..!! 

Friday, October 11, 2013

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்....

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்.... 


படித்தது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி. கிறிஸ்துவப் பாடசாலை. ஆனால் எல்லா சமயத்தவருக்கும் பிராத்தனை இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பக்திப் பாடல்களும், சிவபுராணமுமாய் பொன்னையா மிஸ்ஸின் இனிமையான 
குரலில் பாடக் கேட்பதே ஒரு பரவசமான விசயம் தான். அதுவும் அவர் எம்.எஸ்.எஸ் அம்மாவின் காற்றினிலே வரும் கீதம் பாட்டைப் பாடும் கிடைக்கும் சந்தோசம் இருக்கே....இத்தனை வருசம் ஆகியும் அந்தக் குரல் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை.

வருடா வருடம் நத்தார் பெருநாள் எந்தளவுக்கு சிறப்பாக கொண்டாடப்படுமோ அதே அளவு சிறப்பாக சரஸ்வதி பூசையும் கொண்டாடுவோம். நல்லூர் வீராளி அம்மன் கோவிலுக்கு கிட்ட இருக்கும் ஒரு மண்டபத்தில் தான் எங்கள் பள்ளிக்கூடத்து சரஸ்வதி பூசை கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
சரஸ்வதி பூசை கலை விழாவில் ஒவ்வொரு வகுப்பினரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி கொடுப்பார்கள். நாடகம், பாட்டு, வில்லுப்பாட்டு, நடனம், கோலாட்டம் என்று ஒரு பல்சுவை நிறைந்த கலைவிழாவாக அதிலும் விசேசமாக என்னுடைய வகுப்பு தோழி நளாயினியின் அக்காக்கள் இருவரின் பாம்பு, மயில் நடனம், தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஒரு தாம்பாளத்தின் விளிம்பில் நின்று ஆடும் நடனமுமாய் என்னவொரு சந்தோசமான கலைவிழாவாக அவை இருந்திருக்கின்றன தெரியுமா???

எல்லா மாணவிகளுக்கும் சரஸ்வதி பூசை எப்ப வரும் என்ற ஏக்கம் இருக்கும் ..காரணம் அன்றைக்கு நாம் எல்லாம் பள்ளிச்சீருடைக்கு டாடா பை பை...தான்... பட்டுப் பாவாடை சட்டை என்ன, பாவாடை தாவணி என்ன... அல்லது வூலி நலைக்ஸ் , காஷ்மீர் ஸில்க், ஷிபான் கிரேப் சேலை என்ன என்று அழகழகான வண்ணாத்துப் பூச்சிகளாக , பூச்சரமும், காப்பு, சங்கிலியுமாய் அலங்காரங்களுடன் தோழிகளுடன் சந்தோசமாக கழிக்கும் நாள்.

கலை நிகழ்ச்சி முடிய கிடைக்கும் அவல், சுண்டல், பொங்கல், வடையை விட சேலை கட்டக் கிடைத்த சந்தோசமும், வெட்கமும், பூரிப்பும் தான் அதிகமான விசேசமாக இருக்கும்..!

பள்ளியின் நாலு சுவருக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவிகள் அன்றைக்கு ஒரு நாள் சுதந்திரச் சிறகு முளைத்திருக்கும் பட்டாம் பூச்சிகளாக ஆசிரியர்களின் துணையுடன் வீதியில் நடந்து மண்டபத்துக்கு போவோம். போகும் போது பக்கட்தில் இருக்கும் சென்.ஜோன்ஸ், சென்.பற்றிக்ஸ், பாடசாலை இளவட்ட மாணவர்கள் அவரவர் சைட் அடிக்கும் மாணவிகளைப் பார்க்க சைக்கிளில் வந்து சுழட்டிக் கொண்டு போவதும், கடைக்கண்ணால் பார்த்து தோழிகளுடன் கதாநாயகிகள் கிலுகிலுத்துக் கொண்டு போவதும்.........அதை வேடிக்கை பார்க்கும் சைட் அடிக்க ஆளில்லாத இரண்டாம் கதாநாயகிகளான நாங்களும், புரிந்தும் புரியாதவர்கள் போல் “கேர்ள்ஸ்...அங்க என்ன சிரிப்பு...ஒழுங்கா லைன்ல வாங்கோ பாப்பம்” என்று அதட்டும் ஆசிரியர்களுமாய்.........அடடா....!

எல்லாம் வருசா வருசமும் கொண்டாடும் சரஸ்வதி பூசை கலை விழாவில் எத்தனை வித்தியாசமான புது புது கலை நிகழ்சிகளை நடத்தினாலும் என்னுடைய வகுப்பு தோழி நளாயினியின் அக்காக்கள் இருவரின் பாம்பு, மயில் நடனம், தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஒரு தாம்பாளத்தின் விளிம்பில் நின்று ஆடும் நடனமும், கொலு படியின் முன்னால் மாணவிகள் கோரஸாகப் பாடும் ”வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்” என்ற இந்தப் பாட்டும் எல்லா வருசமும் மாறாமல் இருக்கும். இப்போது இந்தப் பாட்டை கேட்கும் நேரங்களில் திரும்பவும் பழைய பள்ளிக்கூடத்தில் போய் அதே தோழிகளுடன்...அதே ஆசிரியர்களுடன், அதே வகுப்பு மேசையில் இருக்க இன்னொரு சந்தர்ப்பத்தை இந்த வாழ்கை தராதா என்ற ஏக்கம் மனதை வாள் மாதிரி அறுக்கிறது.

Tuesday, October 8, 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.

அந்தப் படம் வந்த மூட்டம் முதல் ஸீன் பார்த்த போது ரொம்பவும் ஸ்லோவா இருக்கிற மாதிரி தெரிய அந்த விசிடி தட்டை தூக்கி எங்கோ மூலையில் எறிந்துவிட்டு போய்விட்டேன்.

நேற்று என்றைக்கும் இல்லாத திருநாளாக என் பிராணநாதர் உட்பட வீட்டில் அனைவரும் உட்கார்ந்து அதே படத்தை வாய் விட்டு சிரித்து சிரித்துக் கொண்டெ பார்த்து முடித்தோம் .

கனநாளைக்கு பிறகு அன்றைக்கு தான் வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து  படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது மனதுக்கு மிகவும் சந்தோசமாக  இருந்தது. படமும் அந்தமாதிரி ஒரு முஸ்பாத்தியான படம். ஒட்டு மொத்தமாக வீட்டிலிருந்த அனைவருமே சொல்லி வைத்தாற் போல் வாய் விட்டு சிரித்து பார்க்க தக்கதாக ஒரு படத்தை தந்ததற்கு அந்த திரைப்படத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.

அந்தப் படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.!! :)

கதாநாயகன் தான் விஜய சேதுபதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அசப்பில் எனது ஃபேஸ்புக் தம்பிமார்களில் ஒருவரான Yogoo Arunakiri யைப் போலவே எனக்கு தெரிந்தார்.  “என்னாச்சி...ஓ கிரிக்கெட் விளையாடினமா...நீ தானே அடிச்சே....?” என்று ஒவ்வொரு தடவையும் அவர் ஆரம்பிக்கும் போதெல்லாம் சம்மந்தமேயில்லாமல் தம்பி யோகா தான் நினைவில் வந்து கொண்டிருந்தார்.

அதுவும் திருமண reception ல் மணப்பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாகி “பா........”” என்று அலறியபடி திரும்பும் ஒவ்வொரு கட்டமும் நாங்கள் எல்லோரும் அவருடன் சேர்ந்து அதே மாதிரி “பா.....” என்று கலாட்டா செய்யுமளவுக்கு சூப்பராக இருந்தது. இன்று காலை குளித்து விட்டு தலை சீவிக் கொண்டிருக்கும் போது என் பிராணநாதர் என்னைப் பார்த்து “பா...” என்றாரே பார்க்கலாம். எனக்கு தெரியும் இனி கொஞ்ச நாளைக்கு நான் என்ன சட்டை போட்டாலும், எப்பிடி தலை இழுத்தாலும் இந்த “பா ....”சத்தம் கேட்க்கப் போவது நிச்சயமெண்டு....

தமிழில் நல்ல படம், இரசிக்கத் தக்க படம், வித்தியாசமான படம், தரமான படம், விரசமில்லாத படம் இனி வரவே வராது என்று ஒப்பாரி வைக்கும் திரைவிமர்சகர்கள் இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்லியிருந்தார்கள் என்று தெரியவில்லை...ஆனால் கன நாளைக்கு பிறகு ஆரம்பம் முதல் கடைசிக்கட்டம் வரை  நகராமல் இருந்து இரசிக்கத்தக்கதாக , தரமான, விரசமேயில்லாத, வித்தியாசமான , மனம் இலேசாகிப் போகுமளவுக்கு வாய் விட்டுச் சிரிக்க வைத்த நல்ல முஸ்பாத்தியான தமிழ் படம் பார்த்ததில் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.

சிவாஜி செத்துட்டாரா???

என்னாச்சி.........??? 

பிற்குறிப்பு:

இவ்ளோ நாள் கழிச்சு ஒரு படம் பாத்திட்டு எழுதியிருக்கிறேன்... எவராவது வந்து இங்கன விஜய சேதுபதி மாதிரி டயலாக்  எழுதினீங்கன்னு வையுங்களேன்.....சூன்யம் வைச்சுடுவேன் ஆம்மா,...ஜாக்கிரதை !!!